நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என நம்புவதாக மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா இன்று குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 சூழலைக் கையாளும் பொருட்டு, நாட்டில் அவசரநிலையை நடைமுறைப்படுத்த வேண்டி பிரதமர் முகைதீன் யாசின் சமர்ப்பித்த கோரிக்கையின் தொடர்பில் மலேசியாவின் ஆட்சியாளர்களை இன்று பிற்பகலில் சந்தித்த பிறகு மாமன்னர் இந்தத் தகவலை அறிக்கை மூலம் வெளியிட்டார்.
“அரசாங்கம் கொவிட்-19 சூழலை நன்றாகவும் திறம்படவும் நிர்வகித்திருப்பதாக மாமன்னர் நம்புகிறார். பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான அமலாக்க நடவடிக்கைகள், கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாம்,” என அரண்மனையின் செய்தியறிக்கை இன்று தெரிவித்தது.
மலேசியாவில் அவசரநிலையை அறிவிக்க வேண்டிய தேவை தற்போது இல்லை என்று மாமன்னர் கருதுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தற்போதிருக்கும் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளைக் கைவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாமன்னர் கேட்டுக்கொண்டதாகவும் அறிக்கை தெரிவித்தது.