மலேசியாவின் பேராக்கில் உள்ள கெரிக் நாடாளுமன்றத் தொகுதி, சாபாவில் உள்ள புகயா சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கு ஒரே சமயத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இவ்விரு இடைத்தேர்தல்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் எனவும் ஜனவரி 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மலேசியாவின் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே இன்று (நவம்பர் 27) தெரிவித்தார்.
கொவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு, சாபாவின் 12வது சட்டமன்றத் தேர்தலில் பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகள், பல்வேறு மேம்பாடுகளுடன் இந்தத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார் அவர்.
“பேரணிகள், உரையாடல்கள், வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்பது, பிரசார துண்டுச் சீட்டுகள் போன்றவற்றை நேரடியாகச் சென்று வழங்க அனுமதி இல்லை.
“சமூக ஊடகங்கள் வழியாக பிரசாரம் செய்யலாம்; தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பதாகைகள் வைக்கலாம்.
“ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் பிரசாரம் செய்யலாம். ஆனால், ஆதரவாளர்கள் கூட முடியாது,” என திரு கனியின் அறிக்கை தெரிவித்தது.
சுமார் 70 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகக்கூடும் என எதிர்பாக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.
கெரிக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு ஹஸ்புல்லா ஓஸ்மான் இம்மாதம் 16ஆம் தேதியும் புகாயா சட்டமன்ற உறுப்பினர் மனிஸ் முகா முகமது டாரா இம்மாதம் 17ஆம் தேதியும் உயிரிழந்ததையடுத்து அவ்விரு இடங்களிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.