மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் மாலை 3 முதல் 5 மணி வரை 40 லிட்டர் கொள்ளளவுள்ள தேநீர் கலன் உடன் சைக்கிளில் சென்று தேநீர் விற்பவரைப் பார்த்திருக்கிறீர்களா?
அவர்தான் கவிவாணன் எனும் கவி. இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இந்த 23 வயது இளையர், கொவிட் சூழலால் வேலை தேடுவதில் சிரமத்தை எதிர்கொண்டவர்களில் ஒருவர்.
கோலாலம்பூரின் சேராசைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கவிவாணன் சுப்ரமணியன், சைக்கிளில் சென்று மசாலா டீ விற்பதன் தொடர்பிலான செய்தி UnderMYPayung எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட பிறகு, பிரபலமாகியுள்ளார்.
மாத சம்பளத்துக்காக ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதற்குப் பதில், சொந்த வர்த்தகத்தைத் தொடங்க வேண்டுமென்ற தனது கனவை நனவாக்க இது உகந்த நேரம் என்று கருதியதாக கவிவாணன் மலாய் மெயிலுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா பரவத் தொடங்கியிருந்த, இவ்வாண்டின் பிப்ரவரி மாதத்தில் பட்டம் பெற்ற அவர், வேலை தேடினார். ஆனால், சூழல் மோசமாகி வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது என்றார் கவி.
“எனக்கு தேநீர் மிகப் பிடிக்கும்; தினமும் நான் அருந்துகிறேன். அதன் தொடர்பில் வர்த்தகத்தைத் தொடங்கினால் என்ன? என்று தோன்றியது,” என்கிறார் இந்த 23 வயது இளையர்.
“என்னை நல்லதொரு நிலையில் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் நல்ல கல்வி கொடுத்த பெற்றோரிடம் எனது தேநீர் வர்த்தகத்தைப் பற்றித் தெரிவித்து அவர்களை சம்மதிக்க வைப்பது எனக்கு வருத்தமானதாக இருந்தது.
“அனைத்தையும் தயார் செய்துவிட்டு, விற்பனையைத் தொடங்குவதற்கு முதல் நாள்தான் அவர்களிடம் இது பற்றித் தெரிவித்தேன். தொடக்கத்தில் அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், ஏதாவதொரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எனது எண்ணத்தைப் பாராட்டியதுடன், மசாலா தேநீர் தயாரிப்பதன் தொடர்பில் சில செய்முறைகளையும் என் தாயார் எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார் கவி.
Uniten பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற கவி, வித்தியாசமான விற்பனை உத்தியைக் கைக்கொள்கிறார்.
தாம் வசிக்கும் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகம் வழியாக தேநீர் ஆர்டர் செய்பவர்களுக்கு சைக்கிளில் சென்று விநியோகம் செய்து வருகிறார் கவி.
தேநீரின் சுவை பிடித்துப்போனதால், முதலில் 30 கோப்பைகள் என்ற அளவில் விற்பனை செய்துகொண்டிருந்த அவர், தற்போது 100 கோப்பைகள் வரை விற்பனை செய்கிறார்.
தம் நண்பருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் கவி.
ஆம்.
தமது பள்ளித் தோழனான அரவிந்த் ரத்ன குமார் என்பவரை மஸ்ஜித் ஜாமெக், மஸ்ஜித் இந்தியா போன்ற பகுதிகளில் சென்று தேநீர் விற்று வர ஏற்பாடு செய்திருக்கிறார் கவி.
வேறு ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த அரவிந்த், முதலில் கவிக்கு உதவிக்கொண்டிருந்தார். தற்போது முழு நேரமாக கவியுடன் சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
40 லிட்டர் தேநீரைத் தயாரிக்க சுமார் ஒன்றரை மணி நேரம் பிடிப்பதாகக் கூறும் கவி, மழையால்கூட தமது வர்த்தகத்தை அசைத்துவிட முடியவில்லை என்கிறார். இன்னும் சொல்லப்போனால், மழை நேரத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் தேநீர் வாங்குவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.