சிலாங்கூரில் வெளிநாட்டு ஊழியர்களிடையே கிருமித்தொற்று பரவியதால் அவர்கள் தங்குமிடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஊழியர் தங்கு மிடங்களில் போதுமான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதலாளிகளை அரசு வலியுறுத்தி யுள்ளது.
நாட்டுக்குள் வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்குத் தேவையான வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
குறைந்தபட்ச வீட்டு வசதிகளை உறுதிப்படுத்தும் 1990ஆம் ஆண்டின் சட்டத்தை முதலாளிகள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
“கடந்த காலங்களில் அங்குமிங்குமாக சிலர் மட்டும் சட்டத்தைப் பின்பற்றினர். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு கையுறை களைத் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான ‘டாப் குளோவ்’ தொழிற்சாலைகளில் ஊழியர்களிடையே கிருமித்தொற்று பரவியதால் அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருக்கிறது,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதில் பொறுமையு டன் முடிவு எடுக்கப்படும் என்று மலேசியா கூறியுள்ளது.
பிரிட்டனில் ஃபசைர்-பயோன்டெக் தடுப்பூசிகளை அடுத்த வாரத்திலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதனை அணுக்கமாகக் கண்காணிக்கப் போவதாக மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.