மலேசியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி போடுவது தொடங்கும். மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு போடுவதற்குத் தேவையான அளவுக்கு தடுப்பு மருந்துகளை அரசாங்கம் வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருவிக்கப்படும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது, திறன் மிகுந்தது என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதல் குழுவினரில் தாமும் ஒருவர் என இன்று திரு முகைதீன் தம் தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.
ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியில் 6.4 மில்லியன் டோஸ்கள் வாங்கவும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது மொத்த மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினருக்கு போடத் தேவையான அளவு.
ஃபைசர் நிறுவனத் தடுப்பூசிகளில் 12.8 மில்லியன் டோஸ்கள் வாங்க கடந்த மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. மற்றொரு 10 விழுக்காட்டினருக்கு கோவேக்ஸ் தடுப்பு மருந்து பெறப்பட உள்ளது.
சீனாவின் சினோவேக், கேன்சினோ ரஷ்யாவின் கேமலியா கழகத்தின் தடுப்பு மருந்து ஆகியவற்றைத் தருவிக்க மலேசியா கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 80% அதாவது 26.5 மில்லியன் மக்களுக்கு போடத் தேவையான அளவுக்கு தடுப்பு மருந்தில் 2.05 பில்லியன் ரிங்கிட் (S$675 மில்லியன்) செலவில் வாங்குவதையும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.