முதற்தொகுதி ஃபைசர்-பாயோன்டெக் கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இன்றிரவு சிங்கப்பூர் வந்தடைந்தன.
இந்தத் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ள ஆசியாவின் முதல் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.
தடுப்பூசி மருந்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தது.
நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 747-400 SQ 7979ல் இன்றிரவு 7.30 மணி அளவில் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கிருமித்தொற்றை முறியடிக்க சிங்கப்பூர் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசி மருந்து சிங்கப்பூர் வந்தடைந்திருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
விமானத்தில் இருந்த தடுப்பூசி மருந்துகளை விமான நிலைய ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களுக்குக் கொண்டு சென்று அவற்றைப் பத்திரப்படுத்தினர்.
அந்தக் கொள்கலன்களில் தடுப்பூசி மருந்துகள் தற்காலிகமாக வைக்கப்படும்.
தடுப்பூசி மருந்துகளைக் கையாள்வது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த சனிக்கிழமை முன்னோட்டப் பயணத்தை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உண்மையான தடுப்பூசி மருந்து களை ஏற்றிக்கொண்டு வந்த விமானத்தின் பயணப் பாதையே முன்னோட்டப் பயணத்தில் பயன்படுத்தப்பட்டது.
உண்மையான தடுப்பூசி மருந்து களை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் முன்னோட்டப் பயணத்தில் பயன்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
பயணத்தின்போது தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளுக்குள் இருந்த வெப்பநிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது.
அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த உலர் பனி உருகும் வேகம் கருத்தில் கொள்ளப்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை சிங்கப்பூருக்குக் கொண்டு வர உதவியது சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குக் கிடைத்துள்ள பெருமை என்று சிங்கப்பூர் ஏர்லைன்சின் சரக்குப் பிரிவு முத்த துணைத் தலைவர் சின் யாவ் செங் கூறினார்.