சிபுவின் பசாய் சியோங்கில் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜோகூரிலிருந்து சென்ற ஒரு பெண்ணிடமிருந்து தொடங்கிய கிருமித்தொற்று குழுமத்தில் புதிதாக 37 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10.30 மணியளவில் அவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிபுவின் பேரிடர் நிர்வாகக் குழுத் தலைவர் சார்லஸ் சியாவ் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி ஜோகூரிலிருந்து பசாய் சியோங்குக்கு சென்ற பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சிபு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜோகூரிலிருந்து காலை 8 மணிக்கு ஃபையர்ஃபிளை விமானம் FY1335 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற அவர், அங்கிருந்து பிற்பகல் 1.35 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH2536 மூலம் குச்சிங்குக்கு சென்றார்.
குச்சின் அனைத்துலக விமான நிலையத்தில் அவருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கிருமித்தொற்று உறுதி இல்லை என்பது தெரியவந்தது.
அங்கிருந்து ஏர் ஏஷியா விமானம் AK6466 மூலம் சிபு சென்றடந்த அந்தப் பெண் அவரது ரூமா லாங்கி எனும் ‘லாங்ஹவுஸ்’ல் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் பின்னர் அவர் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து இம்மாத ம்5ஆம் தேதி ஜாலான் லானாங் ஹெல்த் கிளினிக்கில் இரண்டாவது முறையாக கொவிட்-19 பரிசோதனை எடுத்துக்கொண்டார். அதில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரூமா லாங்கியின் 74 குடியிருப்பாளர்களுக்கு கடந்த 7ஆம் தேதி கிருமித்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 37 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
பசாய் சியோங்கில் உள்ள மற்ற 7 ‘லாங்ஹவுஸ்’களில் வசிப்போருக்கு இன்றும் நாளையும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நேற்றிரவு 11.30 மணி முதல் ரூமா லாங்கி உட்பட 8 ‘லாங்ஹ வுஸ்’களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சாலைகள் மூடப்பட்டன.
அங்கு செல்லவோ, அங்கிருந்து செல்லவோ யாருக்கும் அனுமதி இல்லை.
ரூமா லாங்கி அம்பாவ், ரூமா ஜெலியன் நயோர், ரூமா ரிங்கிட் உன்சு, ரூமா பொம் மஜா, ரூமா ஜெரம் எம்பின், ரூமா கெலி சுண்டாவ், ருமா நியாம்போங் அஜோன் ஆகியவை அந்த 8 குடியிருப்புகள்.
டிசம்பர் 29 முதல் 31 வரையிலான அந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாலான் லனாங் ஹெல்த் கிளினிக் அல்லது சிபு ஜெயா ஹெல்த் கிளினிக்கில் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளலாம்.