மலேசியாவில் இப்போது நடப்பில் இருக்கும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு முடிவடைந்துவிடும் என்று சுகாதார அமைச்சு கோடிகாட்டி இருக்கிறது.
இப்போது அமலில் இருக்கும் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து நிபந்தனையுடன் கூடிய மூன்று மாத நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்புக்கு வரும்.
அத்தகைய கட்டுப்பாடு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அதை இன்னும் நீண்டகாலத்துக்கு அமல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீண்டகாலத்துக்கு நீட்டிக்க நாம் விரும்பவில்லை என்றார் அவர்.
அந்தக் கட்டுப்பாட்டை பிப்ரவரி தொடக்கம் வரை நான்கு வார காலத்திற்கு நீட்டித்து, பிறகு நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு மூன்று மாதங்களுக்கு அமல்படுத்தினால் கொவிட்-19 தொற்றுவோரின் எண்ணிக்கையை ஈரிலக்க அளவிற்கு குறைத்துவிடலாம் என்று நம்பப்படுவதாக நேற்று நடந்த மெய்நிகர் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் இப்போது சரவாக் நீங்கலாக எல்லா மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருக்கிறது. இது பிப்ரவரி 4ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.