மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ள காலகட்டத்தில் கடும் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது, வர்த்தகத்தை மூடுதல் உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் முஹைதின் யாசின் இன்று (பிப்ரவரி 4) தெரிவித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும்போது சாலைத் தடைகளில் போலிசாருக்கு உதவும் ராணுவத்தினருக்கு, விதிமீறுவோரைக் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படும் என தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் வெளியான அவரது பதிவு செய்யப்பட்ட உரையில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் விதிமீறல் குற்றங்களைப் புரிவோருக்கு அபராதங்களை அதிகரிப்பதுடன் சில குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் விதத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு திட்டமிடுவதாகக் குறிப்பிட்டார் அவர்.
நாள்தோறும் பலர் விதிமீறல் குற்றங்களுக்காக பிடிபடுவதுடன், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இம்மாத இறுதிக்குள் 500,000 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆறு வாரங்களுக்கு விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் நான்காவது வாரத்தில், பல மாநிலங்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கிளந்தான், திரங்கானு, பாஹாங் ஆகாகிய மாநிலங்களில் தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கவில்லை என்றார் அவர்.
ஆயினும் சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மூன்று வாரங்களாக தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை 3,000க்கும் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆக அதிகமாக 5,728 பேருக்கு கிருமித்தொற்று பதிவானது.
நேற்று புதிதாக 4,284 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 226,912 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை தொற்றால் அங்கு 809 பேர் உயிரிழந்தனர்.