மலேசியா அதன் இலவச கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டவருக்கும் விரிவுபடுத்தவுள்ளது.
இதன்படி அங்கு படிக்கும் மாணவர்கள், அகதிகள், ஆவணம் இல்லாத குடிபெயர்ந்தோர் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மலேசிய அரசாங்கம் இன்று தெரிவித்தது.
மலேசியாவின் தடுப்பூசித் திட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஓராண்டுக்குள் 32 மில்லியன் மக்கள்தொகையில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது மலேசியா.
“கொள்ளை நோய்ச் சூழலில், தடுப்பூசி வழங்குவதே மனிதாபிமான செயலாகும்,” என்று தடுப்பூசி விநியோகம் தொடர்பில் அரசாங்கக் குழு தெரிவித்தது.
இருப்பினும் இத்திட்டத்தின்படி மலேசியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று குழு தெரிவித்தது.
மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இதற்கிடையே தடுப்பூசிக்குத் தகுதிபெறும் வெளிநாட்டினரில் ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பின்கீழ் பதிவான தஞ்சம் புகுந்தோரும் அடையாளப் பத்திரங்கள் இல்லாத குடியேறிகளும் இலவசத் தடுப்பூசித் திட்டத்திற்குக் தகுதிபெறுவர் என்று அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று கூறினார்.