சிங்கப்பூரை இணைக்கும் மலேசியாவின் புதிய ரயில் நிலையத்தின் நவீன தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜோகூரில் உள்ள புக்கிட் சாகரில் பெருவிரைவு ரயில் நிலையம் கட்டப்படவிருக்கிறது.
இதற்காக நடத்தப்பட்ட வடிவமைப்புப் போட்டியில் ஜோகூரைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் சின் யீ சோங் வெற்றி பெற்றுள்ளார்.
ஜோகூர்-சிங்கப்பூர் உறவையும் வரலாற்றையும் குறிக்கும் வகையில் இரண்டும் ஒன்றாக இணைவதை திரு சின்னின் வடிவமைப்பு காட்டுவதாக பெருவிரைவு ரயில் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஹமட் ஸரிஃப் ஹாஷிம் தெரிவித்தார்.
“எதிர்காலத்தைப் பார்க்கும் விதமாக நவீன தோற்றத்துடன் உள்ளது. நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய வடிவமைப்பு. ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும் ஜோகூரின் சின்னமாக புதிய ரயில் நிலையம் திகழும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற வடிவமைப்பை செய்தியாளர் கூட்டத்தில் இன்று அவர் வெளியிட்டார்.

“ஆறு மாடி உயரத்திற்கு ரயில் நிலையக் கட்டடம் கட்டப்படும். முதல் நான்கு மாடிகளில் குடிநுழைவு, சுங்கத்துறை, தனிமைப்படுத்தல் (சிஐகியூ) ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும்,” என்றார் அவர்.
புதிய ரயில் நிலையத்தை வடிவமைக்கும் போட்டியை எம்ஆர்டி நிறுவனமும் பெர்துபுஹான் ஆக்கிடெக் மலேசியாவும் இணைந்து நடத்தியிருந்தன. மலேசிய கட்டட வடிவமைப்பாளர்களின் திறமையை வெளிக்கொணருவது போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
ஜோகூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் எஸ்எம் ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சின்னுக்கு வெற்றிப் பரிசாக 250,000 ரிங்கிட் (S$82,100) வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் புதிய ரயில் நிலையத்துக்கான நில அகழ்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மறுநாளே ரயில் நிலையத்தை வடிவமைக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. ஜோகூர் சுல்தான் இப் ராஹிம் இஸ்மாயிலின் யோசனையில் உருவான இந்தப் போட்டியில் 91 பேர் பங்கேற்றனர்.