மலேசியாவில் இந்தாண்டு தைப்பூசத் திருவிழாவுக்கு பின்னர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பெரிய தலைவலி காத்திருந்தது. மலைபோல் குவிந்த குப்பையோடு பல்லாயிரம் செருப்புகளும் கோவில் வாசலில் விட்டுச்செல்லப்பட்டன.
கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் கிட்டத்தட்ட 3,000திலிருந்து 5,000 கிலோகிராம் எடையுள்ள செருப்புகளை பக்தர்கள் விட்டுச்சென்றதாக ஆலயம் தெரிவித்தது. பல ஆயிரம் செருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டதாக ஆலயம் கூறியது. இன்னும் பல்லாயிரம் செருப்புகள் அடுத்த சில நாள்களில் அகற்றப்படும் என ஆலயம் தெரிவித்தது.
பத்துமலையில் துப்புரவுப் பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளன. இருப்பினும் கோவிலுக்கு வெளியே உள்ள சில பகுதிகளில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது.
இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் கூடியதால் அதிக குப்பை சேர்ந்ததாகக் கூறப்பட்டது. கூடுதலாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டும், பக்தர்கள் குப்பையை தரையில் விட்டுச்சென்றனர்.