புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பும் வர்த்தக ஒப்பந்தமும் இரு தரப்பிலும் வளர்ச்சிக்கு வித்திடும் என மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நமது ஆழமான நட்பின் விளைவாக இந்த ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது. இது இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தக உறவுகளின் முழு திறனை அடைவதற்கும் பெரிய பொருளியல் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகவும் இருக்கும்," என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தமானது கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானது.
அதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த ஏதுவாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டி இருந்தது.
அதேவேளையில் இந்தியாவில் மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.