ஆலந்தூர்: சென்னைப் பெசன்ட் நகர் கடல் பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள டால்ஃபின் கரை ஒதுங்கியது. மூக்கில் காயத்துடன் அந்த டால்ஃபின் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. இது குறித்துக் கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் அளித்தனர். உடனே வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து டால்ஃபினை பார்வையிட்டனர். பின்னர் கடல்வாழ் உயிரின மருத்துவர் பால் பேட்ரிக் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் காயம் அடைந்த டால்ஃபினுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த டால் ஃபினை மீனவர்கள் உதவியுடன் வனத்துறையினர் ஒரு படகில் ஏற்றிச் சென்று நடுக்கடலில் நேற்று முன்தினம் மதிய வேளையில் கொண்டு போய் விட்டனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டால் ஃபின்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டதில் அந்த டால்ஃபின் காயம் அடைந்து கரை ஒதுங்கி இருக்கலாம். அல்லது கடலுக்குள் ஏதாவது கூர்மையான பொருளுடன் மோதியதால் இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார். நான்கு வயது மதிக்கத்தக்க அந்த டால்ஃபின் 40 கிலோ எடை இருந்ததாக வனத்துறை அதிகாரி டேவிட் ராஜ் தெரிவித்தார். நடுக் கடலில் டால்ஃபினை விட்டதும் அது மகிழ்ச்சியுடனும் புதிய தெம்புடனும் துள்ளிக் குதித்ததாக அவர் கூறினார். ஆண்டுதோறும் இப்பகுதியில் ஒரு டால்ஃபினாவது கரை ஒதுங்குவது வழக்கம். ஆனால் இதுவரை அவற்றில் ஒன்றும் பிழைத்ததில்லை. முதல்முறையாக இந்த அதிர்ஷ்டமான டால்ஃபின் உயிருடன் நடுக்கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்கிறார் அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்.
சென்னை பெசன்ட் நகரின் கடல் கரையோரப் பகுதியில் நீந்த முடியாமல் தத்தளித்து ஒதுங்கிய டால்ஃபினை அந்தப் பகுதி இளையர்கள் காப்பாற்றினர். உயிருக்குப் போராடிய அந்த டால்பினின் மூக்கில் காயம் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. படம்: தகவல் சாதனம்