லதா
சிங்கப்பூர் ஒரு குடியேற்ற நாடு. பல நாட்டு மக்கள் குடியேறிய நாடு. அவர்களுள் இந்தியர்களும் அதிகம். இங்கு குடியேறிய இந்தியர்கள், மொழி கலாசாரத்துடன் இங்கேயே நிலைத்திருக்க வேண் டும் என்பதற்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர் அத்தகைய குடியேறிகளில் ஒருவரான கோ.சாரங்கபாணி. அதற்காக அவர் தொடங்கியதுதான் தமிழ் முரசு நாளிதழ். 1930களில் இருந்து 1974ல் உயிர்நீக்கும் வரையில் 40 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாய மேம்பாட்டுக்குப் பாடுபட்ட தமிழவேள் கோ.சாரங்கபாணியையும் அவர் தோற்றுவித்த தமிழ் முரசையும் பற்றி இன்றைய பார்வையில் எழுதியிருக்கிறார் ஊடகவியலாரும் ஆய்வாளருமான திரு பாலபாஸ்கரன்.
சமூகத்தோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த ஒரே தலைவரான கோ.சாரங்கபாணி வாய்ப்பு வசதியற்ற தமிழர்களின் முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டார். அதற்காகவே தமிழ் முரசும் பாடுபட்டது. முரசைத் துணையாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தின் நட வடிக்கைகளைச் சாரங்கபாணி எப்படி முன்னெ டுத்தார் என்பதே தமது புத்தகத்தின் சாரம் எனக் கூறினார் திரு பாலபாஸ்கரன். "இதுவரை யாரும் அறியாத ஏராளமான தகவல்கள் உண்டு. அவற்றைத் தேடித் தேடித் தொகுத் திருக்கிறேன். இது பல வருட உழைப்பின் பயன்," என்ற அவர், சாரங்கபாணியைப் பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் வந்திருக்கும் நூல் என்று இதனைக் குறிப்பிடலாம் என்றார்.
1950களில் பல ஆயிரம் பேர் சிங்கப்பூர்க் குடி யுரிமை பெற வழிவகுத்தவர் கோ.சா. தமிழர் சீர் திருத்தச் சங்கம், தமிழர் பிரதிநிதித்துவ மன்றம், தமிழர் திருநாள் ஆகியவற்றின் பிதாமகன் அவர். தமிழ்க் கல்வியின் முன்னேற்றத்துக்கும் மலாயாப் பல்கலையில் இந்தியத் துறை நிலைத்து நிற்பதற்கும் தமிழ்ச் சமூகத்தின் உதவியைத் திரட்டியவர் அவர். சாரங்கபாணியின் பொதுவாழ்க்கையில் களங்கம் காண முடியாது என்றாலும் அவர் தமிழ்ச் சமூகத்தின் நன்மைக்காக நடத்திய தமிழ் முரசை இடைக்காலத்தில் நிறுத்தியிருக்கக்கூடாது. சமூக அக்கறை என்ன ஆயிற்று என்ற கேள்விக்கு அது இடம் தந்துவிட்டது என்று எழுதியிருக்கும் நூலாசிரியர், கோ.சா குடும்பத்தை விட்டு முரசு கைநழுவி எஸ்பிஎச் நிறுவனத்துக்குக் கைமாறிய வரலாற்றையும் திரும்பிப் பார்க்கிறார்.
"சிங்கப்பூரின் 200 ஆண்டுத் தமிழர் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியவர்களில் முதன்மையானவர் கோ.சா. அவர் ஒரு தனிமனிதர் என்றாலும் அவருடைய வாழ்க்கை பொது வாழ்க்கையாகவே அமைந்துவிட்டது. வரலாறு எழுத வருவோரை இன்னும் வசியப்படுத்திக்கொண்டிருக்கும் மாமனிதர் அவர்," என்றார் திரு பாலபாஸ்கரன்.