அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் வழியே என் வழி என பழனியில் நடிகை ராதிகா தெரிவித்தார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம்தான் தனது அரசியலுக்கு வருவதைத் தீர்மானிக்கும் என்றார். "பழனி அருகே நடந்து வரும் படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். தற்போது கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளேன். நான் தீவிர அரசியலுக்கு எப்போது வருவேன் என எனக்கே தெரியாது.
"இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் பதில்தான் எனது பதிலும். நான் எப்படி வருவேன், எப்போது வருவேன் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும். சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைவரான சரத்குமார்தான் முடிவு செய்வார். அதில் நான் தலையிடமாட்டேன்," என்கிறார் ராதிகா. எனினும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனது கணவரையும் சமக வேட்பாளர்களையும் ஆதரித்து ராதிகா பிரசாரம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும்போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.