கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 159 கிலோ எடையுள்ள யானைத் தந்தங்களை மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் காட்டினர். இவற்றின் மதிப்பு சுமார் US$382,000 என மதிப்பிடப்படுகிறது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மூன்று வியட்னாமியரிடமிருந்து யானைத் தந்தங்கள் பிடிபட்டன. இரு வியட்னாமியர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், மூன்றாமவர் தேடப்பட்டு வருகிறார்.
அவர் விட்டுச் சென்ற பையில் 58 கிலோ யானைத் தந்தங்கள் இருந்தன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 101 கிலோ தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கமாக கடல் வழியாக யானைத் தந்தங்களைக் கடத்தி வந்தவர்கள் விமானம் மூலம் கடத்தும் புதிய உத்தியில் ஈடுபட்டுள்ளதாக 'டிராஃபிக்' எனப்படும் வனவிலங்கு வர்த்தகக் கண்காணிப்புக் குழுவின் தென்கிழக்காசிய திட்ட மேலாளர் கனிதா கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி