திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனுமான திரு உதயநிதிக்கு (படம்) விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அடுத்த வாரமே அது இடம்பெறலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்களைச் சுட்டி, என்டிடிவி செய்தி தெரிவித்து இருக்கிறது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள திரு உதயநிதிக்கு ஊரக மேம்பாட்டு, சிறப்புத் திட்டங்கள் துறை அல்லது இளைஞர் நலத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிரது.
திமுகவின் ‘உதயசூரியன்’ என அக்கட்சியின் தொண்டர்களால் அழைக்கப்படும் 46 வயதான திரு உதயநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்திலிருந்து உருவெடுத்துள்ள மூன்றாம் தலைமுறைத் தலைவர்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக திமுக இளைஞரணிச் செயலாளராக திரு ஸ்டாலின் பதவி வகித்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அப்பொறுப்பு திரு உதயநிதி வசம் சென்றது.
இந்நிலையில், அண்மையில் நடந்த திமுக உட்கட்சித் தேர்தலிலும் அப்பதவியை திரு உதயநிதி தக்கவைத்துக்கொண்டார்.
திரு கருணாநிதியின் மறைவை அடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு திமுக தலைவராகப் பொறுப்பேற்றார் திரு ஸ்டாலின்.
அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற, தமிழக முதல்வராக அவர் அரியணை ஏறினார்.
பல திரைப்படங்களில் கதா நாயகனாக நடித்திருக்கும் திரு உதயநிதி, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் முக்கியப் பரப்புரையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
திரு உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க கடந்த சில மாதங்களாகவே திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் அவர் கைவசமுள்ள திரைப்படங்களில் நடித்து முடிப்பதற்காகக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் திரு உதயநிதியின் பிறந்தநாளைத் திமுகவினர் மிகப் பெரிய அளவில் கொண்டாடினர். அமைச்சர்களும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களும் நேரில் சென்று இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது, கட்சியிலும் அரசாங்கத்திலும் இவருக்கு இருக்கும் செல்வாக்கினை உணர்த்துவதாக அமைந்தது.
அமைச்சராகப் பதவியேற்பது உறுதி என்பதும் அதற்கான அதிகாரபூர்வமற்ற கொண்டாட்டமே அது என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.
அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருவரும் திரு உதயநிதிக்குச் சாதகமாகக் கருத்துரைத்தனர்.
குடும்ப அரசியல் குறித்து திரு உதயநிதியிடம் முன்னர் கேட்டபோது, “அதுபற்றி எனது தொகுதி மக்கள் முடிவுசெய்யட்டும். எனது பிறப்புச் சான்றிதழைப் பார்க்காதீர்கள், என்னுடைய செயல்பாடுகளைப் பார்த்து மதிப்பிடுங்கள் என்று அவர்களிடம் கூறி வருகிறேன்,” என்று பதிலளித்திருந்தார்.
இதனிடையே, ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி, சி.வி.கணேசன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.