இணையவழி மோசடிப் பேர்வழிகள் விரித்த வலையில் சிக்கி கடந்த மூன்றாண்டுகளாகப் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு வந்த 14,190 பேரை மீட்டுள்ளதாக இந்தியாவின் சைபராபாத் (ஹைதராபாத் தொழில்நுட்ப நகரம்) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்பில் இதுவரை 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு இந்திய மாநிலங்கள் மட்டுமன்றி, பங்ளாதேஷ், நேப்பாளம், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அக்கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; 20 விழுக்காட்டினர் கர்நாடக மாநிலத்தவர்; 15 விழுக்காட்டினர் மகாராஷ்டிர மாநிலத்தவர்; மூன்று விழுக்காட்டினர் வெளிநாட்டினர்.
டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து பாலியல் மோசடிக் கும்பல் இணையம் வழியாகச் செயல்பட்டதாக சைபராபாத் காவல்துறை ஆணையர் ஸ்டீஃபன் ரவீந்திரா கூறினார்.
அம்மூன்று நகரங்களிலும் வாடிக்கையாளர் அழைப்பு மையங்களை அக்கும்பல் அமைத்திருந்தது என்று வாட்ஸ்அப் குழுக்களே அக்கும்பலின் முக்கியமான தொடர்புத் தளமாக விளங்கியது என்றும் காவல்துறை தெரிவித்தது.
சொகுசான வாழ்க்கை, எளிதாகப் பணம் ஈட்டுதல், வேலைவாய்ப்பு போன்ற ஆசைகளைக் காட்டி, பெண்களை அக்கும்பல் தங்களது வலையில் வீழ்த்தியது. இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் விளம்பரம் செய்து, பெண்களை அது ஈர்த்தது.
பாலியல் சேவைக்கு வாடிக்கையாளரிடம் வசூலித்த பணத்தில் 30 விழுக்காட்டைப் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தந்த அக்கும்பல், 35 விழுக்காட்டை விளம்பரங்களுக்காகச் செலவிட்டது.
எஞ்சிய 30 விழுக்காட்டை அக்கும்பல் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டது.
முகம்மது அதீம், அர்னவ், அரோரா, நிகில் எனப் பல பெயர்களில் செயல்பட்ட முக்கியக் குற்றவாளி, மும்பை, கோல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 950 பெண்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவந்ததாகவும் போதைப்பொருளை விற்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அத்துடன், ரிஷி என்ற முகம்மது அப்துல் சல்மானால் கடந்த ஆறாண்டுகளில் ஏறக்குறைய 900 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து 34 திறன்பேசிகள், மூன்று கார்கள், ஒரு மடிக்கணினி, 2.5 கிராம் போதைப்பொருள் ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியது.
பாலியல் மோசடிக் கும்பல்மீது சைபராபாத், ஹைதராபாத் காவல்துறை 39 புகார்களைப் பதிவுசெய்துள்ளது. இன்னும் பலர் தலைமறைவாக உள்ளனர்.