அனுஷா செல்வமணி
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள், சொந்த நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் திகழவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் அரசாங்கம் முயற்சிகளைத் தொடரும் என்று மனிதவள துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்தார்.
அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு லிட்டில் இந்தியாவின் பர்ச் ரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான வாழ்விடச் சூழலை அமைப்பதற்கான முயற்சிகள் தொடரும் என்று குறிப்பிட்டார்.
அதோடு, அத்தகைய ஊழியர்களின் தங்குமிட வாழ்க்கை தலைசிறந்த நடைமுறைகள், தரங்களுடன் தொடர்ந்து மேம்படும். பலதரப்பட்ட சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையில் அத்தகைய ஊழியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.
ஒருங்கிணைந்த தொடக்க சுகாதாரப் பராமரிப்பு முறையும் மறுபரிசீலனை செய்யப்பட்டு சீரமைக்கப்படும். இவற்றோடு வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூகப் பொழுதுபோக்கு வசதிகளும் நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இவற்றை எல்லாம் சாதிக்க ஒவ்வொருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார் அமைச்சர்.
அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடும் வகை யில் மனிதவள அமைச்சின் ஏசிஇ குழுமம், 120க்கும் மேற்பட்ட பங்காளி அமைப்புகளுடன் சேர்ந்து இம்மாதம் 10ஆம் தேதி முதல் நேற்றுவரை ‘கைகோர்ப்போம், பிணைப்பை வலுப்படுத்துவோம்’ என்ற கருப்பொருளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.
அவற்றில் 50,000 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சிகளுக்கு முத்தாய்ப்பாக லிட்டில் இந்தியாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 6,500 பேர் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு ஊழியர்களுடன் உள்ளூர் மக்களும் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், தங்கள் சகாக்கள் தங்கள் மொழியில் அரங்கேற்றிய கலாசார நிகழ்ச்சிகளை ஊழியர்கள் கண்டு மகிழ்ந்தனர். தங்கள் நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர்.
இதனிடையே, இங்கு கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலில் வேலை பார்க்கும் தமிழ்நாட்டின் காரைக்குடியைச் சேர்ந்த ராமைய்யா தேவர் மாதவன், 50, வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.