அனுஷா செல்வமணி
பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என நம் வாழ்க்கை கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது. ஆயினும், ஒருவரின் முடிவு, இன்னொருவருக்குத் தொடக்கமாக இருக்கலாம். அவ்வாறு சிலரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் ஆற்றலுடைய, உயர்ந்த செயல்தான் உறுப்பு தானம். அறிவியல் பெரிதும் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றை மற்றொருவரின் உடலில் பொருத்த முடிகிறது. இத்தகைய சூழலில், உறுப்பு தானம் பற்றி மக்களிடையே எந்த அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது என்பதை அறிந்துவந்தது தமிழ் முரசு.
ஆறு மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிங்கப்பூரில் உடலுறுப்பு தானத்திற்கான விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. மற்றப் பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூரில் 40 பேரில் பாதிப் பேர் மட்டுமே உறுப்பு தானத்திற்கு தகுதியானவர்களாக இருப்பர் என்கிறார் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் தலைவரும் இணைப் பேராசிரியருமான பிரேம ராஜ் ஜெயராஜ் (இடப்படம்)
அவசர சிகிச்சை தேவைப்படுவோர் அல்லது கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உறுப்பு தானம் அவசியமாகிவிடுகிறது. மூளைச்சாவு அடைந்துபோவோரிடமிருந்தும் நல்ல உடல்நலத்துடன் இருப்போரிடம் இருந்தும் உறுப்பு தானம் பெறுவதுண்டு.
மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்பு பொதுவாக அந்த நோயாளியின் குடும்பத்தினரிடம் இருந்து வரும். நோயாளியுடன் தொடர்பில்லாதவர்களும் உறுப்பு தானமளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார் டாக்டர் பிரேம ராஜ்.
கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கிய பிறகு, உறுப்பு தானம் வழங்க முன்வருவோரின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாகக் கூறுகிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் ‘ஹெபடோபிலியரி-பேன்கிரியாட்டிக்’ பிரிவின் மூத்த ஆலோசகரும் இணைப் பேராசிரியருமான ஸ்ரீதர் கணபதி ஐயர் (மேல்படம்).
உறுப்பு தானமளிக்கத் தயங்குவோருக்கும் தகுந்த மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் ஸ்ரீதர், சிங்கப்பூரில் சிறுநீரகம் தானம் அளிக்க உயிருடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அறுவை சிகிச்சைக்கு ஒருவர் சராசரியாக ஒன்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.
‘பிறருக்கு அந்நிலை வரவேண்டாம்’
முதுமைக்கால மறதிநோய்க்குத் தகுந்த சிகிச்சையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற முனைப்பில் மூளைத் திசு தானம் செய்ய முன்வந்திருக்கிறார் திருவாட்டி லலிதாம்மா நாயர், 61 (படம்).
இவரின் 73 வயது கணவர் கடந்த 12 ஆண்டுகளாக முதுமைக்கால மறதிநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அடிக்கடி ரத்த நன்கொடை அளிக்கும் திருவாட்டி லலிதாம்மா, ஈராண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இணையத்தில் அதுபற்றிப் படித்தபோது ‘பிரெய்ன் பேங்க்’ எனும் அமைப்பு பற்றி அறிய நேர்ந்தது. அந்த அமைப்பின் மூலம் ஒருவர் மூளைத் திசு தானத்திற்குப் பதிவுசெய்யலாம் என்பதை இவர் அறிந்தார்.
இப்போது இருக்கும் சிகிச்சைகள், நோய்க்கான அறிகுறிகளை மட்டும் குறைக்க வழிவகுக்கின்றன. மறதிநோயால் தம் கணவர் சிரமப்படுவதைக் கண்ட திருவாட்டி லலிதாம்மா, தமது மூளைத் திசுக்களையும் அறிவியல் ஆராய்ச்சிக்குத் தர முடிவுசெய்தார்.
“நாம் இறந்தபின் நம் உடல் அதன் பயனை இழந்துவிடுகிறது. பயனற்றுப் போவதற்குப் பதிலாக இதுபோன்ற ஓர் உன்னத நோக்கத்துக்காக என் மூளைத் திசுக்களைத் தானம் அளிப்பது மனநிறைவு தருகிறது,” என்றார் திருவாட்டி லலிதாம்மா.
இவரது ஊக்கத்தால் இப்பொழுது அவரின் மகளும் மூளைத் திசு தானத்திற்கு தம் பெயரைப் பதிவுசெய்துள்ளார்.
வாடிய பூங்கொடி மாறினாள் இப்படி!
குடும்பத்தின் கடைக்குட்டியான தீக்ஷா ஆனந்த், 2008ஆம் ஆண்டில் பிறந்தபோது நல்ல உடல்நலத்துடன் இருந்தாள். ஆனாலும், தற்போது 14 வயதில் இவரது வாழ்க்கையை கொடிய நோய் ஒன்று புரட்டிப் போட்டுவிட்டது.
தீக்ஷாவின் அண்ணன் சத்யாவிற்கு நான்கு வயதானபோது அவனுடைய சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
‘எஃப்எஸ்ஜிஎஸ்’ எனும் அரிய வகை மரபியல் சிறுநீரக நோயால் சத்யா பாதிக்கப்பட்டு இருந்தது உறுதியானது. அதாவது, சிறுநீரகத் திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதனால், சிறுநீரகப் பகுதியில் வடு ஏற்பட்டு, ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரிக்கும் தன்மையை சிறுநீரகம் இழந்துவிடுவதை இந்நோய் குறிக்கிறது.
சத்யா ஆறு வயதாக இருந்தபோது தீக்ஷா பிறந்தார். தம் மகனைப் போல் தீக்ஷாவுக்கும் சிறுநீரகக் கோளாறு இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் தாயார் திருவாட்டி புஷ்பா, இரண்டு வயது தீக்ஷாவிற்கு வீட்டிலேயே சிறுநீர் ‘டிப்ஸ்டிக் (Dipstick)’ பரிசோதனை செய்து பார்த்தார்.
சோதனை முடிவில் தீக்ஷாவின் சிறுநீரில் புரதம் இருப்பதை உணர்ந்த திருவாட்டி புஷ்பா, மருத்துவரை நாடினார். சத்யாவுக்கு இருந்த அதே சிறுநீரகக் கோளாற்றால் தீக்ஷாவும் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப் படுத்தப்பட்டது.
தீக்ஷாவுக்கு ஏழு வயதானபோது அண்ணன், தங்கை இருவரின் சிறுநீரகங்களும் ஒரே நேரத்தில் செயலிழந்தன.
தீக்ஷா வாரம் மூன்று முறை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் சிறுவர் சிறுநீரக நிலையத்தில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குச் சென்றார். ரத்தத்தில் இருந்து கழிவுகளையும் நீரையும் அகற்றும் ‘ஹீமோடயாலிசிஸ்’ எனும் ரத்தச் சுத்திகரிப்பு தீக்ஷாவிற்கு மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு முறையும் தீக்ஷா ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சைக்குச் செல்லும்பொழுது, தீக்ஷாவின் கழுத்தில் இருக்கும் நரம்புகளில் வடிகுழாய்கள் செருகப்பட்டன. அதற்குமுன் நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், அண்ணனுடன் காற்பந்தாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தீக்ஷா, ரத்தச் சுத்திகரிப்பு தொடங்கியபின் சோர்ந்து போனார்.
அடிக்கடி சோர்வு அடைந்ததாலும் பசியின்மையினாலும் தீக்ஷா மெலிந்துபோனார். சத்யா ஏற்கெனவே மாத்திரைகளை உட்கொண்டு வந்ததால், வயிற்றுப் பகுதியில் வடிகுழாய்களைச் செருகி, கழிவுகளை அகற்றும் ‘பெரிடோனியல் (Peritoneal) டயாலிசிஸ்’ சிகிச்சைக்குச் சென்றார்.
தீக்ஷாவும் சத்யாவும் தங்களுக்கு மாற்றுச் சிறுநீரகம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இருவருக்கும் ஒரே ‘பி+’ ரத்த வகை.
பெற்றோர் இருவரும் தங்களின் சிறுநீரகத்தைத் தானம் அளிக்க முன்வந்தபோதும் இது ஒரு மரபியல் நோய் என்பதால் தானமளிக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இறந்த குழந்தை ஒன்றின் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்காக கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதை மருத்துவர் 2018ஆம் ஆண்டு தெரிவித்தார்.
பரிசோதனை முடிவில், குழந்தையின் சிறுநீரகம், தீக்ஷாவிற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
மகனுக்குப் பொருத்தமான சிறுநீரகங்கள் கிடைக்கவில்லை என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தங்கள் மகளுடைய வாழ்க்கை மீண்டும் ஒளிபெற பெற்றோரான ஆனந்த் தம்பதியினர் காத்திருந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு தனது 10 வயதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைவழி புதுச் சிறுநீரகங்களைப் பெற்றார் தீக்ஷா. இது அவரது வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து, வாழ்வை மேம்படுத்தியது.
தீக்ஷாவுக்குப் புதிய சிறுநீரகம் கிடைத்தாலும் அவர் நாள்தோறும் 30 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.
“இருண்டுபோன எங்கள் வாழ்வில் ஒளியூட்டும் வகையில் இருந்தது தீக்ஷாவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. என்னுடைய மகள் பிற பிள்ளைகள்போல வாழ்வதைப் பார்க்கும்போது என் மனம் பூரிப்படைகிறது,” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருவாட்டி புஷ்பா.
இன்னும் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ செய்துகொண்டுதான் வருகிறார், சத்யா. தங்கையைப்போல் தனக்கும் ஒருநாள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார் இப்போது 20 வயதாகும் சத்யா.
“என் குடும்பத்தாரும் நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். என் தாயார் இரவுபகல் பாராது என்னை கவனித்துக்கொண்டார். அந்தநோய் என் வாழ்வைப் புரட்டிப் போட்டாலும் எந்த ஒரு துன்பத்திலிருந்தும் என்னால் மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார் தீக்ஷா.
முழு உடலும் அறிவியலுக்கே!
தற்போது 60 வயதாகும் திருவாட்டி ஆனந்த லதா (படம்), தமது 35 வயதில் கணவரை இழந்தார். கணவரின் உடல்நலம் குன்றியபோது, அவருடைய உறவினர்கள் யாரும் உதவிபுரிய முன்வரவில்லை. இருப்பினும், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அவர்கள் ஆர்வம் காட்டியதைக் கண்ட திருவாட்டி லதா, இறுதிச் சடங்குகள் மீதான நம்பிக்கையை இழந்தார்.
அதனால், தாம் இறந்தபின், தம் மகன்கள் இருவரும் தமக்கு இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது என்று அப்போதே இவர் உறுதியாக முடிவெடுத்துவிட்டார்.
“இறந்த பிறகு ஒருவரது உடலைப் பார்த்துக்கொண்டு கண்ணீர் வடிப்பதால் எந்தப் பயனும் இல்லை,” என்கிறார் இவர்.
திருமணமாகி கேரளாவில் இருந்து சிங்கப்பூர் வந்த இவருக்கு சிறுவயதிலிருந்தே பிறருக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது.
உடல்நலக் கோளாறுகளால் இவரால் ரத்த நன்கொடை அளிக்கவும் நீண்ட நேரம் நிற்கவும் முடியாது. ஆனாலும், வேறு எவ்வழியிலேனும் பிறருக்கு உதவ வேண்டும் என்று இவர் விரும்பினார். தம் நண்பரின் பரிந்துரையில், ‘MTERA’ எனும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சிச் சட்டத்தின்கீழ், தாம் இறந்தபின் தமது முழு உடலையும் மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ ஆராய்ச்சி, கல்வி போன்ற நோக்கங்களுக்காக தானமாக வழங்க இவர் பதிவுசெய்துவிட்டார்.
திருவாட்டி லதாவின் மூத்த மகனும் தமது முழு உடலையும் தானமாக வழங்க இருக்கிறார்.
20 ஆண்டுகளில் 215 முறை ரத்த தானம்
மனிதவள, செயல்பாட்டுத் துறையில் பணிபுரியும் திரு கதிரேசன் பக்கிரிசாமிக்கு (படம்) 39 வயது. கடந்த 20 ஆண்டுகளில் 215 முறை ரத்த தானம் செய்துள்ள இவர், அந்த உன்னதச் செயலைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர விரும்புகிறார்.
தம்முடைய 18 வயதிலிருந்து, தம் தந்தை ரத்த தானம் தரச் சென்றபோதெல்லாம் இவரும் கூடவே சென்றுவந்தார்.
மும்மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் அளித்து வந்த இவர், தமது 19வது வயதில் இருந்து ‘எஃபிரெசஸ் (Apheresis)’ தானமளிக்கத் தொடங்கினார்.
ரத்தத்தில் இருக்கும் ‘பிளேட்லெட்ஸ்’, ‘பிளாஸ்மா’ போன்றவை இந்த எஃபிரெசஸ் தானத்தின்வழி பெறப்படும்.
ஊசியைக் கண்டால் பயம், ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வரும் என்று காரணம் அடுக்குவதை விட்டுவிட்டு, அந்த அச்சத்தைப் போக்கி, பிறருக்கு எவ்வாறு உதவலாம் எனச் சிந்திக்க வேண்டும் என்கிறார் இவர்.
“ஊசியைக் கண்டு பயப்படும் நானே இவ்வளவு காலமாக ரத்த தானம் செய்யும்போது பிறராலும் அது முடியும் என நம்புகிறேன்,” என்று கூறும் திரு கதிரேசன், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாழ்நாள் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
ரத்த தானம் செய்யும் பழக்கத்தை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும் என்று இவர் வலியுறுத்துகிறார்.
‘ரத்தம் தந்துவிட்டேன், இப்போது இதனையும் தருகிறேன்’
சிறுபான்மை இனத்தவர் எலும்பு மஜ்ஜை நன்கொடை அளிக்க முன்வருவதில்லை என்பதை அண்மையில் எலும்பு மஜ்ஜை ((Bone Marrow) தானமளிக்கும் திட்டம் கண்டறிந்தது.
இதுகுறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த ‘மேட்ச் ஃபார் லைஃப் 2022’ எனும் நன்கொடையாளர் சேர்ப்புத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறிய அளவில் வலி இருந்தாலும் எலும்பு மஜ்ஜை தானம் இன்னொருவரின் உயிரைக் காப்பாற்றப்போகிறது என்பதை நினைக்கும்போது மனநிறைவாக உள்ளது என்கிறார் செய்முறை தொழில்நுட்பர் ஆனந்த் திருநாவுக்கரசு, 39 (படம்).
முதன்முறையாக எலும்பு மஜ்ஜை தானம் செய்தபின், அதே நோயாளிக்கு மீண்டும் எலும்பு மஜ்ஜை தேவைப்படவே ஒரு மாதத்திற்குள் 2வது முறையாகவும் அதை வழங்கினார் திரு ஆனந்த்.
தேவைப்பட்டால் மீண்டும் எலும்பு மஜ்ஜை தானம் செய்யத் தயாராக இருக்கும் இவர், பல ஆண்டுகளாக ரத்த தானமும் செய்து வருகிறார். சிங்கப்பூர் இந்திய சமுதாயத்தினரிடையே எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பது இவரது விருப்பம்.
உறுப்பு தானம்: நடப்பு நிலவரம்
எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டத்தின்கீழ், நம் சமுதாயத்தில் 9% இந்தியர்கள் மட்டுமே எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர்களாகப் பதிவுசெய்துள்ளனர்.
உடற்கூறாய்விற்குப்பின் மனித உடம்பிலிருந்து எடுக்கப்படும் மூளைத் திசுக்களை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி வருகிறது ‘தி பிரெய்ன் பேங்க் சிங்கப்பூர்’ அமைப்பு.
கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான தரவுகளின்படி, மொத்தம் 218 பேர் ‘பிரெய்ன் பேங்க்’ அமைப்பில் நன்கொடையாளராகப் பதிவுசெய்துள்ளனர். அதில் 15 பேர் மட்டுமே இந்திய சமுதாயத்தினர். அவர்களில் நால்வர் முழு உடலையும் தானமாகத் தர முன்வந்துள்ளனர்.
‘லிவ் ஆன் (Live On)’ எனும் சமூக அமைப்பின் அண்மைய கணக்கெடுப்புப்படி, சென்ற ஆண்டு ஜூன் மாதம்வரை, 402 நோயாளிகள் மாற்றுச் சிறுநீரகம் பெற காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.
சுகாதார அறிவியல் ஆணையத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 30,000 நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
சிங்கப்பூரில் தற்போது 1.73 விழுக்காட்டினர் மட்டுமே ரத்த தானம் அளிக்கிறார்கள். O+, A+ ரத்த வகை இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது.
இந்தியர்களிடத்தில் Rh-ரத்த வகை அதிகம் கண்டறியப்படுகிறது. Rh- ரத்த வகை இருப்பவர்களுக்கு ரத்தம் தேவைப்படும்பொழுது, அதே வகை ரத்த நன்கொடையாளர் கிடைத்தால் நல்லது.
விடுமுறைக் காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் ரத்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த வங்கிகளில் இருப்பு கிட்டத்தட்ட 20% குறைகின்றது.
“சிகிச்சைகளுக்கும் ரத்தப்போக்கிற்கும் மட்டுமே ரத்தம் தேவைப்படுவதில்லை. ரத்த நன்கொடை அளிக்க ஏராளமானோர் முன்வரும் பட்சத்தில், தேசிய அளவில் ரத்தமேற்றுதலுக்குத் தேவையான அளவு ரத்தம் நம்மிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்,” என்கிறார் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த நன்கொடைத் திட்டத் தலைவர் பிரகாஷ் மேனன் (படம்).