அஜித் குமார் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் இவ்வாண்டு பொங்கலன்று வெளிவந்தது ‘துணிவு’ திரைப்படம். இதில் இடம்பெற்ற ‘கேங்ஸ்டா’ பாடல் யூடியூப் தளத்தில் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. ஸ்பாட்டிஃபை தளத்தில் இரண்டரை மில்லியன் முறை (streams) ஒலித்துள்ளது.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளிவந்த இப்பாடலுக்கு குரலும் வரிகளும் கொடுத்துள்ளார், சிங்கப்பூர் கலைஞர் ஷபீர். இப்பாடல் வெற்றியடைந்ததில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
‘கேங்ஸ்டா’ பாடலின் வேகமும் துடிப்பும் உலகெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது தன் மனதை தொட்டுள்ளதாக கூறினார் ஷபீர். மலேசியாவில் அமைந்துள்ள அஜித் ரசிகர் மன்றங்களில் ஒன்று, நீண்ட காலத்துக்குப் பின்னர் நடிகர் அஜித்தை கொண்டாடுவதற்கென ஒரு சிறப்புப் பாடலை தந்துள்ளதாக கூறிய சம்பவத்தை நினைவுகூர்ந்தார் ஷபீர்.
“இன்னும் பத்தாண்டுகளுக்கு இது எல்லோரின் மனதிலும் நிலைத்திருக்கும் என்று அவர்கள் கூறியது மனநிறைவு அளித்தது,” என்றார் அவர்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் கோரிக்கையை ஏற்று கொவிட்-19 சமயத்தில் தனக்கு மிக நெருங்கிய ராப் பாணியிலான இப்பாடலின் வடிவமைப்பில் சிங்கப்பூரில் இருந்துகொண்டே கைகொடுத்தார் ஷபீர். அவரது மாதிரி குரல் பதிவு இயக்குநரையும் நடிகர் அஜித்தையும் கவர்ந்ததைத் தொடர்ந்து, அவரே இப்பாடலை பாடுவது என முடிவானதாக அவர் கூறினார்.
தற்புகழ்ச்சியை பிரதிபலிக்கும் விதத்திலான வரிகளை அஜித் விரும்பாத காரணத்தினால், இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தன்முனைப்பூட்டும் கருத்துகளை கருவாக அமைக்க முயற்சி செய்துள்ளதாக விளக்கினார் ஷபீர். அஜித் போன்ற ஒரு நட்சத்திரத்துக்காக பாடல் எழுதுகையில் இத்தகைய சுதந்திரம் கிடைத்ததை அவர் சுட்டினார். தமிழக இசைத்துறைக்கு தன்னை அறிமுகப்படுத்திய ‘யாயும் ஞாயும்’ பாடல் அனுபவத்தை ஒப்பிட்டார்.
இது குறித்து கூறுகையில், “நீயும் நானும் என்று தொடங்கும் வரிகள் யாருக்கும் புரியாது என்று அப்போது சிலர் கூறினர். அதைப் புறந்தள்ளி சங்க இலக்கிய வரிகளைப் பயன்படுத்தியதே அப்பாடலின் வெற்றிக்கு காரணமானது. படைப்புகளில் நமக்கு நாமே உண்மையாக இருப்பது கலைஞர்களின் கையில் உள்ளது என்பதை நினைவில் கொண்டுள்ளேன்,” என்றார். சுய இசை பின்னணி கொண்டுள்ள தனக்கு இத்தகைய சோதனை முயற்சியை மேற்கொள்ள ‘கேங்ஸ்டா’ பாடல் இடம்கொடுத்ததாகவும் ஷபீர் கூறினார். பாடல் வரிகளுக்கான தூண்டுதலை உள்நோக்கியும் வெளிநோக்கியும் தேடிக் கொள்வதாக ஷபீர் மேலும் தெரிவித்தார்.