இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி 76 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ஓட்டங்களுக்கு சுருண்ட வேளையில், ஆஸ்திரேலிய அணி 197 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், 2வது இன்னிங்சில் இந்திய அணி ஓரளவு நல்ல ஓட்ட எண்ணிக்கையை எடுக்க முற்பட்டது. தனி ஆளாக நின்று போராடிய சட்டீஸ்வர் புஜாரா, 142 பந்துகளில் 59 ஓட்டங்களை எடுத்து இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டார். அவருடன் உறுதுணையாக நின்று விளையாடிய அக்ஷர் பட்டேல் 15 ஓட்டங்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.
மற்ற வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்காமல் சொதப்பியதால் இந்திய அணி 163 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன், எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு 76 ஓட்டங்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.