மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான ஆட்டத்திறனாலும் மிட்செல் மார்ஷின் அசத்தலான பந்தடிப்பாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) மாலை நடைபெற்ற இந்த ஆட்டம் வெறும் 37 ஓவர்களே நீடித்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்தடிப்பாளர்களைத் திக்குமுக்காடச் செய்தார். 26 ஓவர்களிலேயே 117 ஓட்டங்களுடன் இந்திய அணி ஆட்டமிழந்தது.
அதையடுத்து பந்தடிக்கத் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஷும் டிராவிஸ் ஹெட்டும் கட்சிதமாக வேலையை முடித்தனர். மார்ஸ் 66 ஓட்டங்களைக் குவித்தும் ஹெட் 51 ஓட்டங்களை எடுத்தும் எளிதில் இலக்கை எட்டினர்.
பதினொரு ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டிவிட்டது.
மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 எனும் ஆட்டக் கணக்கில் சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதியாட்டம் புதன்கிழமை (மார்ச் 22) சென்னையில் நடைபெறுகிறது.