இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளன. அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு வெற்றியாளரான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த அரங்கான சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கும் ஐபிஎல் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறது.
அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனியும் அரங்கிலுள்ள இருக்கைகளுக்கும் தெளிப்பானைக் கொண்டு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டார்.
அதனைக் காட்டும் காணொளியைச் சென்னை அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இன்று (மார்ச் 28) நண்பகல்வரை இக்காணொளி 600,000க்கும் மேற்பட்டோரை ஈர்த்துள்ளது.
அவ்வரங்கில் ஏப்ரல் 3ஆம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை அணி, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்த்தாட இருக்கிறது.
இதுவரை 13 முறை ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ள நிலையில் சென்னை அணி ஒன்பது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது; நான்கு முறை மகுடம் சூடியுள்ளது.