ஏராளமான விமானச் சேவைகளில் ஒன்றிரண்டில் மட்டுமே அவசர மருத்துவ சிகிச்சைக்கான தேவை ஏற்படுகின்றது. அதுபோன்ற விமானத்தில் இருமுறை இருந்துள்ளார் திரு சுந்தர்.
ஏப்ரல் மாதம் துபாயிலிருந்து லண்டன் செல்லும் விமானத்தில் சென்று கொண்டிருந்த திரு சுந்தரை உறக்கத்திலிருந்து எழுப்பியது, ‘கைதேர்ந்த மருத்துவ நிபுணர் தேவை’ எனும் அறிவிப்பு. அவசரநிலை ஒன்று நேர்ந்துள்ளதாகவும், மருத்துவ உதவி உடனே தேவைப்படுவதாகவும் அந்த அறிவிப்பு கூறியது.
தன்னுடன் 400 சகபயணிகள் இருக்கும் பெரிய விமானத்தில் தாதியோ மருத்துவரோ இல்லாத நிலைக்கான சாத்தியம் குறைவே என்று ஒருபுறம் திரு சுந்தர் எண்ணினார்.
முழுநேரமாக பாதுகாப்புத் துறையில் பொறியியல் சார்ந்த வேலை பார்க்கும் திரு சுந்தர் தேர்ச்சிபெற்ற மருத்துவ உதவியாளரும்கூட.
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய சேவை காலத்தின்போது அவர் பெற்ற மருத்துவ உதவியாளர் பயிற்சி அவரின் நினைவில் நிலைத்திருந்தது. இக்கட்டான நிலையில் அப்பயிற்சி ஒருவேளை உதவலாம் என்ற சிந்தனை அவரை விமானப் பணியாளர்களை நோக்கி விரைந்தோடச் செய்தது.
ஆறடி உயர மத்திய கிழக்கு நாட்டவர் ஒருவர் மயக்கமுறும் நிலையில் இருப்பதை திரு சுந்தர் கண்டார். விமானக் குழுவிடம் தாம் ‘Paramedic Level 2’ தகுதி பெற்றிருப்பதைக் கூறி, உடனே அந்த ஆடவரை கவனிக்க முற்பட்டார். ஐம்பது வயது மதிக்கத்தக்க, உடல்வாகில் பெரிதான அந்த ஆடவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தது.
தாம் கற்ற மருத்துவ அணுகுமுறைகளை நினைவுபடுத்தி, ரத்த அழுத்தம், உயிர்மூச்சு அளவு ஆகியவற்றை நோயாளியின் முக்கிய அறிகுறிக் கருவியைக் கொண்டு திரு சுந்தர் கண்காணித்தார். திடீரென நோயாளி வாந்தி எடுக்கத் தொடங்கியவுடன் அவரை சரிவர கவனித்து பொறுமையாக வழிகாட்டினார் திரு சுந்தர். நோயாளியைத் தூய்மைப்படுத்தி, புது உடை அணியவும் அவர் உதவினார்.
அச்சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த தாதி ஒருவரும் திரு சுந்தருடன் இணைந்து அவருக்குத் தக்க பராமரிப்பு வழங்க உதவினார்.
“அரபு மொழி மட்டுமே பேசிய அந்த ஆடவர் கூறுவதைப் புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது. அவரின் நண்பரின்மூலமே அவருக்கு செரிமானப் பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது."
“அந்த முகமறியா ஆடவருக்கு இயன்றவரை உதவியது மிகுந்த மனநிறைவு அளித்தது,” என்றார் திரு சுந்தர் பிலவேந்தர்ராஜ்.
இத்தகைய சூழ்நிலையில் உதவுவது திரு சுந்தருக்கு முதல்முறை அன்று. நான்காண்டுகளுக்கு முன்னர் மியன்மாரிலிருந்து சிங்கப்பூர் திரும்பிக்கொண்டிருந்த சமயத்திலும் ஒரு மருத்துவ அவசரநிலையில் அவர் உதவினார்.
அதிகளவில் மது அருந்திவிட்டு மூர்ச்சையற்று இருந்த ஓர் ஆடவருக்கு திரு சுந்தர் உதவினார்.
“எதிர்பாராத நேரங்களில் நாம் கற்றுக்கொண்ட திறன்கள் நமக்கோ, நம்மைச் சுற்றியுள்ளோருக்கோ கைகொடுக்கும் என்பதை மறக்காமல் அவற்றைத் தொடர்ந்து நினைவில் வைத்துக்கொள்வது பயனுள்ளதாய் அமையக்கூடும்,” என்று தெரிவித்தார் திரு சுந்தர்.