ஹவ்காங்கில் அமையவிருக்கும் மிதிவண்டிப் பாதையில் விளக்குகளைப் பொருத்தும் பணிகளுக்கு வழிவிடும் வகையில் ஒன்பது மரங்களை வெட்ட முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்மரங்கள் வெட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மிதிவண்டிப் பாதைக்கு அருகில் அமையவிருக்கும் கூட்டுரிமைக் குடியிருப்புச் சொத்து மேம்பாட்டாளருக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
‘தி ஃபுளோரென்ஸ் ரெசிடன்சஸ்’ எனும் அந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பின் மேம்பாட்டாளர் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்த திட்டத்தில் அந்த ஒன்பது மரங்கள் அகற்றப்படுவது பற்றி குறிப்பிடப்படவில்லை என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விளக்குகளுக்கான தெரிவுகள் குறித்து ஆராய நிலப் போக்குவரத்து ஆணையமும் தேசிய பூங்காக் கழகமும் அண்மையில் அச்சொத்து மேம்பாட்டாளரைச் சந்தித்தன.
மிதிவண்டிப் பாதைக்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தில், புதிய கம்பிவடங்களைப் பொருத்துவதற்கு மரங்களை அகற்றவேண்டிய தேவை இருக்காது. அதற்குப் பதிலாக, அப்பகுதியில் தற்போதுள்ள தெருவிளக்கு உள்கட்டமைப்பே பயன்படுத்தப்படும் என்று பேச்சாளர் கூறினார்.
ஹவ்காங் அவென்யூ 2ல் கூட்டுரிமைக் கட்டடத்திற்கு அருகில் ஐந்து பெரிய மரங்கள் அகற்றப்பட்டதால், அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு அதிக நிழல் கிடைப்பதில்லை என்று ஷின்மின் சீன நாளிதழ் மே மாதம் 15ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.