புதுடில்லி: ஜி20 மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை, இந்தியாவின் வளமான பண்பாடு, வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என்று பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
ஜி20 உச்சநிலை மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்றுகூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன், பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும் என்று அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லி, பிரகதி மைதானத்தில் 9,10ஆம் தேதிகள் நடைபெற உள்ள ஜி20 மாநாடு அரங்கத்தின் முகப்பில் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில் அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
18 டன் எடை கொண்ட இந்தச் சிலை, அஷ்டதாதுக்கள் என அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு, பாதரசம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற சிற்பியான சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. சோழப் பேரரசு காலத்திலிருந்தே 34 தலைமுறைகளாக ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் சிலைகள் செய்து வருகின்றனர். சிலை அமைக்கும் திட்டத்தை கலாசார அமைச்சு செயல்படுத்தியுள்ளது.
பிரபஞ்ச ஆற்றல், படைப்பாற்றல் சக்தி ஆகியவற்றின் முக்கிய அடையாளமான நடராஜர் சிலை ஜி20 உச்சநிலை மாநாட்டில் ஓர் ஈர்ப்பாக அமையும்.