சீனாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் விசா பிரச்சினை காரணமாக மூன்று இந்திய வீராங்கனைகள் கலந்துகொள்ள இயலாத பிரச்சினை பற்றி ஆசிய ஒலிம்பிக் மன்றமும் ஆசிய விளையாட்டுகள் ஏற்பாட்டாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள் என்று அந்த மன்றத்தின் இடைக்காலத் தலைவர் ராஜா ரன்திர் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மன்றமும் ஏற்பாட்டாளர்களும் அரசாங்கமும் இந்த விவகாரம் பற்றி ஆராய்ந்து வருகிறது என்று சீனாவின் ஹாங்சூ நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வூஷூ தற்காப்புக் கலை வீராங்கனைகளுக்குச் சீனா கடப்பிதழில் முத்திரை குத்தப்பட்ட விசாவை வழங்கவில்லை. பதிலாக அவர்களுடைய கடப்பிதழில் ஒரு தாளை இணைத்து அதில் விசாவை வழங்கி இருந்தது.
இத்தகைய விசாவை செல்லுபடியாகக்கூடிய விசாவாக இந்தியா ஏற்றுக்கொள்வதில்லை என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
10 பேர் அடங்கிய அந்த அணியின் எஞ்சிய விளையாட்டாளர்கள் புதன்கிழமை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, விளையாட்டு வீரர்களுக்குச் சீனா விசாவை மறுப்பதில்லை என்று சென்ற வாரம் இந்த மன்றத்தின் நியதிக் குழு தலைவர் வெய் ஜிசோங் கூறினார்.
இதே போன்ற ஒரு சம்பவம் ஜூலை மாதத்தில் நிகழ்ந்தது. அதே மூன்று வீராங்கனைகளுக்கு முத்திரை குத்தப்படாத விசா வழங்கப்பட்டதால் அவர்கள் சீனாவின் செங்டு நகரில் நடந்த உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வூஷூ தற்காப்புக் கலை குழு கலந்துகொள்ளவில்லை.
சீனா-இந்தியா எல்லை அருகே அருணாச்சலப் பிரதேசம் அமைந்து இருக்கிறது. அதை திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கோருகிறது.
அருணாச்சாலப் பிரதேசத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள இறையாண்மையைக் கேள்விக் குறியாக்கும் விதத்தில் சீனா தனித்தாளில் விசா வழங்கும் நடைமுறையைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது.