மான்செஸ்டர்: இங்கிலாந்தின் கரபாவ் கிண்ணப் போட்டியின் மூன்றாவது சுற்றில் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட், கிறிஸ்டல் பேலசை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
தற்போதைய இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தைத் தடுமாற்றத்துடன் தொடங்கிய யுனைடெட், கடந்த சனிக்கிழமையிலிருந்து மீண்டுவரும் அறிகுறிகளைக் காண்பிக்கிறது. அந்த வகையில் சக பிரிமியர் லீக் குழுவான பேலசுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வென்றது.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் யுனைடெட்டை முன்னுக்கு அனுப்பினார் இளம் வீரர் அலெஹாண்ட்ரோ கார்னாச்சோ. 27வது நிமிடத்தில் கசமியரோ கோல் எண்ணிக்கையை இரரண்டாக்கினார்.
பிற்பாதியாட்டம் தொடங்கிய 10 நிமிடங்களில் ஆன்டனி மார்சியால் யுனைடெட்டின் மூன்றாவது கோலைப் போட்டார்.
மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிரிமியர் லீக் குழுவான உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ், சாம்பியன்ஷிப் லீக்கில் போட்டியிடும் இப்சுவிச் டவுனிடம் 3-2 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. சாம்பியன்ஷிப், பிரிமியர் லீக்கிற்கு அடுத்த நிலையில் உள்ள லீக் போட்டி.
மற்றொரு பிரிமியர் லீக் குழுவான லூட்டன் டவுன், சாம்பியன்ஷிப் லீக்கிற்கு அடுத்த நிலையில் இருக்கும் லீக்கில் போட்டியிடும் எக்செட்டர் சிட்டியிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது.