ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அசோக் கெலாட் உறுதியளித்துள்ளார்.
மேலும், சமையல் எரிவாயு உருளை 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அதன் ஐந்தாண்டுத் தவணைக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில், நவம்பர் 25ஆம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தானைப் பொறுத்தமட்டில் காங்கிரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும் அதிகாரத்தை கைப்பற்ற பாரதிய ஜனதாவும் தீவிரமாக முயல்வதால் மாநிலத் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில் ஜுன்ஜுனுவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டார். அவர் உரையாற்றும்போது மாநில மக்களுக்கு அவ்விரண்டு தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கினார்.
“கிரகலட்சுமி உத்தரவாதத் திட்டத்தின்கீழ், குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இது பல தவணைகளில் பிரித்து வழங்கப்படும்,” என்று முதல்வர் தெரிவித்தார்.
மேலும், “இதைப்போல 1.05 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்,” என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.