லண்டன்: உலக அளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்திய பொருளியல் உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள ஜெய்சங்கர், தீபாவளியன்று லண்டனில் அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் மிகச்சிறந்த தலைமை இருக்கிறது என்றும் அது தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்று வெற்றிகரமாக தனது பணியை நிறைவேற்றியதாக அவர் கூறினார்.
தமது பயணத்தின் மூலம், இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி விவாதிக்க நல்ல வாய்ப்பு அமைந்ததாக திரு.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
“இருதரப்பு உறவை மறுவடிவமைப்பதில் இரு நாடுகளும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயணம், 2021இல் தொடங்கப்பட்ட விரிவான வியூகக் கூட்டாண்மையின் ஒரு பகுதி.
“இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான, வளமான உறவும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையும் முக்கியமானவை,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் இல்லத்தில், ரிஷி சுனக் தம்பதியரை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், சிறிய பிள்ளையார் சிலை ஒன்றையும், இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை ஒன்றையும் பரிசளித்தார்.