கீவ்: உக்ரேன் அமைதித் திட்டத்திற்கு உதவும் ஆக அண்மைய நடவடிக்கைகளில் ஒன்றாக, வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனும் சுவிட்சர்லாந்தும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை நடத்த உள்ளன.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏறத்தாழ 120 தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்பார்கள் என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது.
சுவிஸ் உல்லாச பொழுதுபோக்கு நகரான டாவோஸில் அந்தக் கூட்டம் நடக்க உள்ளது. உலகப் பொருளியல் கருத்தரங்கும் மறுநாள் அதே நகரில் நடக்கிறது.
உக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நான்காவது முயற்சி இது. இதற்கு முன்னர் கோபன்ஹேகனிலும் ஜெட்டாவிலும் அமைதி முயற்சி கூட்டங்கள் நடைபெற்ற பின்னர் ஆக அண்மையில், அக்டோபர் மாதம் மால்டாவில் அதேபோன்ற கூட்டம் நடைபெற்றது.
மால்டா ஆலோசனைக் கூட்டம் உலக அமைதி உச்சநிலைக் வட்டத்திற்கான தேதியை நிர்ணயிக்க வகை செய்யும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். உக்ரேன் வகுத்துள்ள 10 அம்ச அமைதித் திட்டத்திற்கு ஒட்டுமொத்த ஆதரவை திரட்ட அந்த உச்சநிலைக் கூட்டம் அவசியம்.
உக்ரேன் அதிபர் வெலாடிமிர்ஸெலென்ஸ்கி 2022 டிசம்பரில் ஏற்படுத்திய வரைவுத் திட்டம் அது.
திட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துவது தொடர்பான முடிவை எடுக்க இருக்கும் அந்த உச்சநிலைக் கூட்டம் 2024 பிப்ரவரியில் நிகழக்கூடும் என்று கீவ் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.