பருவகால உயர் கடலலைகளால் புலாவ் உபினில் உள்ள தாழ்வான நிலப்பகுதிகள் சில, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவும் ஜனவரி 13ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடல் அலை வழக்கத்துக்கு மாறாக 3.3 மீட்டர் வரை உயர்ந்ததை அடுத்து தென்கடலோரப் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் கணுக்கால் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
தேசிய பூங்காக் கழகம் தீவின் வடிகால் அமைப்பை மேம்படுத்தியதன் வழி கடந்த ஈராண்டாக வெள்ளப் பாதிப்பு குறைந்துள்ளதாக புலாவ் உபின் தீவில் கடை வைத்திருப்போரில் சிலர் கூறுகின்றனர்.
பருவகால கடல் அலைகள் ஜனவரியிலும் பிப்ரவரியிலும் வெள்ளம் ஏற்படக் காரணமாக இருந்துவருகின்றன. அத்துடன் கனமழையும் சேர்ந்துகொள்ளும்போது கடல் நீர் தீவை ஊடுருவித் தாழ்வான பகுதிகளை மூழ்கடிப்பதுண்டு.
இதுவரை ஆக உயரமான கடல் அலை 3.9 மீட்டர் வரை இருந்ததாகவும் இது 1974ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலுள்ள கால்வாய்களிலும் நீர் நிரம்பி வழிந்ததை ஜனவரி 12ஆம் தேதி காலைவேளையில் காண முடிந்தது.