வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமாக வாக்களிப்பு நடத்தப்படுகிறது.
அண்மையில் அயோவாவில் நடைபெற்ற வாக்களிப்பில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
ஆனால் கொலொராடோ மாநில வாக்களிப்பில் அவர் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே, மேய்ன் மாநிலத்தில் நடைபெறும் வாக்களிப்பில் டிரம்ப் போட்டியிடுவது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, டிரம்ப்பின் மேல்முறையீடு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று மேய்ன் மாநில நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் வாக்கெடுப்பில் டிரம்ப் போட்டியிடுவது குறித்து 30 நாள்களுக்குள் மேய்ன் மாநிலம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
மேய்ன் மாநில நீதிமன்றத்தின் தீர்ப்பை டிரம்ப் தரப்பினர் வரவேற்றனர்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்த பிறகு, பதவியில் நீடிக்க அவர் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டியதாகக் கூறி கொலொராடோ மற்றும் மேய்ன் மாநிலங்கள், வாக்கெடுப்பில் டிரம்ப் போட்டியிடத் தடை விதித்தன.
இந்த மாநிலங்கள் விதித்த தடைகளை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார்.