மியூனிக்: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஆர்னல்ட் ஷ்வார்சனேகர், 76, ஜனவரி 17ஆம் தேதி, ஜெர்மனியின் மியூனிக் நகர விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வைத்திருப்பது குறித்து சுங்கத் துறைக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி வந்த அவர், தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படக்கூடும் என்றும் அந்தக் கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்படும் என்றும் சுங்கத்துறை கூறியது.
அந்த ஆடம்பரக் கைக்கடிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பதற்கு அவர் திட்டமிட்டிருந்ததால் அதற்கு வரி செலுத்தியிருக்க வேண்டும் என்று அது கூறியது.
அந்தக் கைக்கடிகாரத்தை, பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் ஜனவரி 18ஆம் தேதி திரு ஷ்வார்சனேகர் ஏலத்தில் விற்கத் திட்டமிட்டிருந்தார்.
உலக அளவில் பிரபலமான முன்னாள் உடற்கட்டழகர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில முன்னாள் ஆளுநர் போன்ற சிறப்புகளைப் பெற்ற அவர் மீது வரி ஏய்ப்பு தொடர்பில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.