சேலம்: திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டை முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாணவர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் தொடங்கி வைத்தார்.
சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்க சாரை சாரையாக தொண்டர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்புப் பணியில் மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் சிறப்பு நிகழ்வுகளாக மாநாட்டு மலர், 10 பாசறை நூல்கள் ஆகியவற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அதில் முக்கியமாக ஆளுநர் பதவி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்
1) பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞர் அணி முன்னெடுக்கும்.
2) ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும்.
3) கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
4) நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை திமுக போராடும். நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம்.
5) மத்திய அரசு, மத்திய அமைப்புகளைப் பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான மாநிலங்களை மிரட்டி வரும் போக்குக்கு கடுமையான கண்டனம்.
6) தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
7) பாஜக ஆட்சியை வீழ்த்திடவே திமுக இளைஞரணி செயல்படும்.
8) ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்த வேண்டும்.
9) குலக்கல்வியை எதிர்த்துப் போராட்டம் தொடரும்.
10) பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல் அமைச்சர் செயல்பட வேண்டும்.
11) மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தல் ஆகிய முக்கிய தீர்மானங்களுடன் மாநாட்டில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் விலக்கு நம் இலக்கு
நீட் தேர்வுக்கு எதிராக 50 நாட்களில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்து அட்டைகள் மாநாட்டு திடலில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #BANNEET என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து மாநாட்டில் கட்சியின் மூத்த முன்னோடிகள் மரியாதை செய்யப்படுகிறார்கள். நீட் விலக்கு நம் இலக்கு என்ற தபால் அட்டை ஒப்படைக்கப்படுகிறது.
திமுக இளைஞர் அணியின் முதல் மாநாடு கடந்த 2007ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்தது. இந்த நிலையில், 2வது இளைஞர் அணி மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியேற்றப்பட்டது. கொடியை திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஏற்றி வைத்தார்.