உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை விரிவுபடுத்தும் பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைச்சாவடியின் பரப்பளவை ஐந்து மடங்கு அதிகரிக்க இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான முதற்கட்ட பணிகள் 2028ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய உட்லண்ட்ஸ் நகர மையத்திலும் புக்கிட் தீமா விரைவுச்சாலையிலும் சோதனைச்சாவடி விரிவுபடுத்தப்படும்.
அதன் பிறகு, பழைய உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி இடிக்கப்பட்டுப் புதிய கட்டடத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
புதிய கட்டடம் 2032ஆம் ஆண்டுக்குள் தயாராகி, முழுமையாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஜனவரி 29ஆம் தேதியன்று கூறியது.
அடுத்த 10லிருந்து 15 ஆண்டுகளில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியைக் கட்டங்கட்டமாக மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
நில மீட்புப் பணிகள் மூலமாகவும் சோதனைச்சாவடியை மறுசீரமைக்க அது திட்டமிட்டுள்ளது.
நில மீட்புப் பணிகளை ஜேடிசி கார்ப்பரேஷன் மேற்கொள்ளும்.
விரிவாக்கப் பணிகள் சோதனைச்சாவடியின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருக்காது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தேவையான நில அளவை நிர்ணயிக்க, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் கூறியது.
மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிலப்பகுதியை நில மீட்புப் பணிகள், நில கையகப்படுத்துதல் ஆகியவை மூலம் பெறலாம் என்று ஆய்வு மூலம் தெரியவந்ததாக ஆணையம் கூறியது.
மறுசீரமைக்கப்படும் சோதனைச்சாவடியின் பரப்பளவு 88 காற்பந்துத் திடல்களுக்குச் சமம். அதில் தற்போதைய கட்டடமும் அடங்கும்.
நில மீட்புப் பணிகள் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் தொடங்கி 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பணிகள் காரணமாக சுற்றுப்புறத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக ஆணையம் கூறியது.
நில மீட்புப் பணிகள் குறித்து ஜேடிசியிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூடுதல் விவரங்கள் கேட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி மறுசீரமைக்கப்பட்டதும் அவ்வழியாகச் செல்லும் அனைத்து வகை வாகனங்களும் எல்லையைக் கடந்து செல்ல எடுத்துக்கொள்ளும் நேரத்தை 60 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களுக்குக் குறைக்க ஆணையம் இலக்கு கொண்டுள்ளது.
புதிய சோதனைச்சாவடியில் தானியங்கி முறையை அதிகம் பயன்படுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புக்கு எவ்விதப் பங்கமும் ஏற்படாதபடி சோதனை நடவடிக்கைகளைச் சோதனைச்சாவடியில் நடத்தாமல் அங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள இடத்தில் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பழைய உட்லண்ட்ஸ் நகர மையத்தில் விரிவாக்கம் செய்யப்படும் சோதனைச்சாவடியில் இருவழி சாலைகள் அமைக்கப்படும் என்றும் சரக்கு வாகனங்கள் செல்வதற்காக அங்கு 21 தடங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் கார்களுக்காக 78 தடங்கள் அமைக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது.
இந்த கார் தடங்கள் மோட்டார் சைக்கிள்களுக்கான தடங்களாக மாற்றியமைக்கப்படலாம். அப்பகுதியில் 156 மோட்டார்சைக்கிள் தடங்களை அமைக்கலாம் என்று ஆணையம் கூறியது.
உச்சவேளையின்போது போக்குவரத்தை நிர்வகிக்கவும் சீர்ப்படுத்தவும் ஆணையம் நீக்குப்போக்குடன் செயல்பட இந்த அணுகுமுறை வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.