எடின்பர்க்: சாதாரண முதுகு வலி என்று கூறி மருத்துவமனைக்குச் சென்ற 21 வயது இளைஞர் ஒருவர், அதே வாரத்தில் இறந்துவிட்டார்.
அனைவருக்கும் வரக்கூடிய முதுகு வலி என்று நினைத்திருந்த ஸ்காட்லாந்து நாட்டவரான ஜெரால்டு கிரீன், தன்னுடைய புதிய கட்டில்தான் காரணம் என எண்ணினார்.
ஆனால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் வாந்தி எடுக்கத் தொடங்கியதுடன் இருமி ரத்தம் கக்கினார்.
திரு கிரீனின் தாயார், போலா, உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
கடுமையான ரத்த சோகையால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், உடனே அவரது சிறுநீரகங்களிலிருந்து நீரை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
ஆனால், அறுவை சிகிச்சையின்போது, திரு கிரீனின் மூச்சு நின்று போனது. அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் அவரை உயிர்ப்பித்து கோமா நிலையில் வைத்திருந்தனர்.
கோமாவிலிருந்து மீண்ட திரு கிரீன், ஒருவாரமாக சோதனைகளுக்கு உட்பட்டு தனக்குப் புற்றுநோய் இருக்கும் செய்தியை அறிந்துகொண்டார்.
புற்றுநோயின் கடுமை அதிகம் என்பதால் அந்திமகால இல்லத்திற்கு அவர் மாற்றப்பட்டார். ஜனவரி 30ஆம் தேதியன்று இல்லத்திற்கு வந்து சில மணி நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
தன் தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து அவரை திரு கிரீன்தான் பராமரித்து வந்தார்.