சுகாதார அமைச்சு, சமூகப் பராமரிப்புத் துறையினர்க்கான சம்பள வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
திறனாளர்களைத் தக்கவைக்க உதவும் வகையில் போட்டித்தன்மையுடன்கூடிய சம்பளங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தாதியர், மருந்தியலாளர், துணை நிலை ஊழியர்கள் எனப் பல்வேறு வேலைகளுக்கான, பரிந்துரைக்கப்படும் தொடக்க சம்பளம், அந்தப் பணியாளர்கள் வாழ்க்கைத் தொழிலின் மத்திய காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய சம்பளம் இரண்டையும் அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழிகாட்டிக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைச் சம்பளத்தில் போனஸ், படித்தொகை, இதர சலுகைகள் போன்றவை சேர்க்கப்படவில்லை.
“துறைசார்ந்தோருடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகே அந்த வழிகாட்டிக் குறிப்புகள் உருவாக்கப்பட்டன.
“ஒட்டுமொத்த சமூகப் பராமரிப்புத் துறை ஊழியரணிக்கும் அவை பொருந்தும்,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இத்துறையின்கீழ் செயல்படும் மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள், மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் தற்போது 18,000க்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிப்பதால் இத்தகைய பராமரிப்புக்கான தேவையும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகப் பராமரிப்புத் துறையின் நிலையங்கள் பல, தொண்டூழிய நலவாழ்வு அமைப்புகளால் நடத்தப்படுபவை. அவற்றின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பெரிய அளவிலான மாறுபாடு காணப்படுகிறது. இத்துறையில் ஆட்சேர்ப்பும், ஊழியர்களைத் தக்கவைப்பதும் சிரமமாக இருப்பதாகப் புகார் கூறப்பட்டது.
இத்தகைய அமைப்புகள் ஊழியர்களை ஈர்க்கவும் திறனாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் புதிய வழிகாட்டிக் குறிப்புகளில் காணப்படும் போட்டித்தன்மைமிக்க சம்பளம் உதவும் என்று நம்பப்படுகிறது. அந்த ஊழியர்கள் நியாயமான சம்பளத்தைப் பெறவும் அது வகைசெய்யும்.
துறைசார்ந்த அமைப்புகள் வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றுவது கட்டாயமன்று. இருப்பினும் அதைப் பின்பற்றி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி அமைச்சு அவற்றை ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே அதிக சம்பளம் தரப்பட்டால் அதைக் குறைக்கவேண்டாம் என்றும் அமைப்புகளை அது கேட்டுக்கொண்டது.