சண்டிகார்: அரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வந்தது. எனினும், கூட்டணியில் அங்கம் வகித்த ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையே பல நாள்களாக பூசல் இருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில் பூசல் முற்றியது. அதனால் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி முறித்து கொள்ள உள்ளது என தகவல் வெளியானது.
இந்த சூழலில், மனோகர் லால் பதவி விலகினார். அவருடன் அமைச்சர்களும் பதவி விலகினர். இதனால், அமைச்சரவை கலைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், அரியானாவின் புதிய முதல் அமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றார்.
இந்த நிலையில் அரியானா சட்டசபையில் புதன்கிழமை நடந்த சிறப்பு கூட்டத்தில் முதல் அமைச்சர் நயப் சிங் சைனி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்ட சபையில் தற்போது பாஜக வுக்கு 41 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு 6 சுயேட்சை மற்றும் அரியானா லோகித் கட்சி எம்எல்ஏவின் ஆதரவு உள்ளது.
அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், நயப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.