இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் ஏராளமானவர்கள் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) அந்நாடு துக்கம் காத்தது. தேசியக் கொடிகள் அரை கம்பத்துக்கு இறக்கப்பட்டன.
தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக சூளுரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.
“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மார்ச் 23ஆம் தேதி, மக்களுக்கு ஆற்றிய உரையில் திரு புட்டின் வருத்தம் தெரிவித்தார்.
குரோகஸ் சிட்டி ஹால் என்ற 6,200 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் மக்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். மார்ச் 23ஆம் தேதி மாஸ்கோ முழுவதும் மக்கள் ரத்த தானம் செய்ய வரிசை பிடித்து நின்றனர்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 22) நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு மட்டும்தான் காரணம் என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஏட்ரியேன் வாட்சன் கூறியுள்ளார்.
அந்தத் தாக்குதலுடன் உக்ரேனுக்கு சம்பந்தம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாஸ்கோவிற்கு வெளியே நடந்த ராக் இசை நிகழ்ச்சியில் சோவியத் கால ‘பிக்னிக்’ ராக் குழு “அப்பிரைட் ஆஃப் நத்திங்’ என்ற பாடலைப் பாடத் தொடங்குவதற்கு முன்னர் அரங்கினுள் நுழைந்து ஆயுததாரிகள் சரமாரியாகச் சுட்டதில் ஏராளமானோர் இறந்தனர்.
மாஸ்கோவில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று தனக்குக் கிடைத்த தகவலை அமெரிக்க அரசாங்கம் இம்மாதத் தொடக்கத்தில் ரஷ்யாவுடன் பகிர்ந்துகொண்டது. அதுகுறித்து இம்மாதம் ஏழாம் தேதியன்று அமெரிக்கா, தனது நாட்டு மக்களுக்கு ஆலோசனை அறிக்கையையும் விடுத்ததென்று திருவாட்டி வாட்சன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
“இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு மட்டும்தான் பொறுப்பு. இதில் உக்ரேன் எந்த விதத்திலும் ஈடுபடவில்லை,” என்றார் அவர்.
பழியை மற்றவர் பக்கம் திருப்பிவிடும் முயற்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஈடுபட்டுள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சாடினார். சனிக்கிழமையன்று (மார்ச் 23) காணொளிவழி ஆற்றிய தமது உரையில் அவர் அவ்வாறு சொன்னார்.
திரு ஸெலென்ஸ்கி, ஒவ்வொருநாளும் இரவில் காணொளி வழி உரையாற்றி வருகிறார்.
இதற்கிடையே, மாஸ்கோ தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்போவதாக திரு புட்டின் உறுதியளித்துள்ளார். அச்செயல், காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயல் என்று அவர் வகைப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான குரோக்கஸ் மண்டபம் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.