பராமரிப்பு, தேவையானதை வழங்குதல், அதிகாரம் அளித்தல் ஆகிய ‘ஃபார்வர்ட் எஸ்ஜி’ இயக்கத்தின் மூன்று தூண்களுக்கேற்ப இளையர்களை வருங்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது ‘யூத் கனெக்ஷன்ஸ் 2024’.
மக்கள் கழக நற்பணிப் பேரவை இளையர்ப் பிரிவு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ‘என்யுஎஸ் யூடவுனில்’ நடைபெற்றது.
17 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டோர் எனக் கிட்டத்தட்ட 90 பேர் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சரும் நற்பணிப் பேரவை ஆலோசகருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டார்.
வர்த்தகம் மற்றும் நிதி, சுய மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி ஆகிய கருப்பொருள்களில் மொத்தம் ஒன்பது கருத்தரங்குகள் நடைபெற்றன.
“ஒவ்வொரு கருத்தரங்கின் படிப்பினைகளையும் வாழ்க்கையின் வெவ்வேறு அங்கங்களில் பயன்படுத்தலாம்,” என்ற டாக்டர் ஜனில், இளையர்களைத் தொண்டூழிய அமைப்புகளில் சேரவும் ஊக்குவித்தார்.
தொழில்முனைவுச் சிந்தனை, தலைமைத்துவம், வேலையிடத்தில் மனநலம் காத்தல், வேலை-வாழ்க்கை ஒருங்கிணைப்பு, சொத்துகளை அதிகரித்தல் போன்றவை குறித்து கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
செயற்கை நுண்ணறிவின் மத்தியில் வேலைகளைத் தக்கவைத்துக் கொள்வது குறித்த கருத்தும் எழுந்தது.
“திறன்மிக்கவரின் கைகளில் நவீனத் தொழில்நுட்பங்களின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். அதனால், அந்த திறமைக்கான தேவை தொடர்ந்து நிலைத்திருக்கும்,” என்றார் ‘ஷஃபுல் கலெக்டிவ்’ நிறுவனர் ரிஷி வர்மன்.
“சேட்ஜிபிடியிலும் பிழைகள் எழுகின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதற்குத் துறைசார்ந்த அடிப்படை அறிவு தேவை,” என்றார் ‘ஒரகல்’ தரவு ஆய்வாளர் பிரகாஷ் நடராஜன்.
“வாழ்வில் ஒரு நிலையை அடைந்தபின்புதான் ஓய்வெடுப்பேன் என்று எண்ணுவது தவறு,” என்றார் தொலைக்காட்சிக் கலைஞர் காயத்திரி சேகரன்.
“நம்மை நாம் எவ்வாறு காண்கிறோமோ அவ்வாறுதான் உலகம் நம்மைக் காணும்,” என ‘எஸ்டி இஞ்சினியரிங்’ குழுத் தலைமை செயல்வினை நிர்வாகி (தொழில்நுட்பம், புத்தாக்கம்) ரவிந்தர் சிங் கூறிய கருத்து தம்மைக் கவர்ந்ததாகக் கூறினார் நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நற்பணிப் பேரவை இளையர் பிரிவைச் சார்ந்த பிரியா சுந்தரம், 33.