ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் கடந்த மூவாண்டுகளில் சராசரியாக ஒரு குவளை காப்பியின் விலை சுமார் 70 விழுக்காடு அதிகரித்துள்ளது.
காப்பிக் கடைகளில் விற்கப்படும் ஒரு குவளை காப்பியின் விலை முன்பு 1.50 ரிங்கிட்டாக (0.45 வெள்ளி) இருந்தது. இப்போது அதன் விலை கிட்டத்தட்ட 2.60 ரிங்கிட் வரை அதிகரித்துள்ளது.
கடையில் அருந்தாமல் வாங்கிச் சென்றால் விலை 2.80 ரிங்கிட்டுக்கும் உயரக்கூடும்.
ஜோகூர் பாரு நகரிலும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பகுதிகளிலும் இருக்கும் பல காப்பிக் கடைகளில் உள்ள நிலவரத்தை தி ஸ்டார் ஊடகம் அறிந்தது. ஒவ்வொரு குவளை காப்பியின் விலை 2.30லிருந்து 2.60 ரிங்கிட்டுக்கு இடைப்பட்டிருப்பதை அது தெரிந்துகொண்டது.
நெஸ்காஃபே காப்பி, மைலோ போன்ற பானங்களின் விலை 3.50லிருந்து நான்கு ரிங்கிட்டுக்கு இடைப்பட்டுள்ளது.
காப்பிக் கொட்டைகள், காப்பித் தூள், சர்க்கரை ஆகியவற்றின் விலை உயர்வு இந்நிலைக்குக் காரணம் என்று காப்பிக் கடை உரிமையாளர்கள் பலர் தெரிவித்தனர்.
எனினும், அது மட்டும் காரணம் அல்ல என்றார் ஜோகூர் பாரு காப்பி, உணவக, மதுபானக் கூட சங்கத்தின் துணைத் தலைவர் யோங் வா கோங். கடைகளை நடத்துவதற்கான செலவு கூடியது, ரிங்கிட்டின் மதிப்பு சரிவது போன்ற காரணங்களாலும் காப்பி விலை அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.
ரிங்கிட்டின் மதிப்பு சரிவதால் சிங்கப்பூர் வெள்ளியில் சம்பாதிக்கப் பலர் சிங்கப்பூர் செல்வதால் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதும் சவாலாக இருந்து வருவதாக அவர் தி ஸ்டாரிடம் குறிப்பிட்டார்.
காப்பி போன்ற பானங்கள் மட்டுமின்றி உணவு வகைகளை விற்பதிலும் உணவகங்கள் இதே பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. அதைக் கையாள விலையை அதிகரிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவின் அளவை குறைப்பது குறித்து பலர் ஆலோசித்து வருவதாக ஜோகூர் இந்திய முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஹுசைன் இப்ராகிம் கூறினார். இதன் தொடர்பில் அரசாங்கம் பங்காற்றலாம் என்றும் அவர் கருத்துரைத்தார்.