பாசிர் ரிஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று முன்தினம் எரிவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து அந்தக் கட்டடத்தின் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இலையஸ் சாலை புளோக் 610ல் புதன்கிழமை காலை 10 மணி முதல் சுமார் எட்டு மணி நேரத்துக்கு எரிவாயு வாடை அதிகளவில் நுகரப்பட்டது என்று நேற்று ஷின் மின் நாளிதழ் தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் தரைத் தளத்தின் ஒரு பகுதி குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு மூடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பின்னர் பழுது பார்ப்புப் பணிகள் நடத்தப்பட்டன. முதல் தளத்திலிருந்து ஏழாம் தளம் வரை உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. 'சிங்கப்பூர் பவர்' மற்றும் 'சிட்டி கேஸ்' நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக அறியப்படுகிறது. வீடமைப்புக் கட்டடத்தில் எரிவாயு விநியோகம் தடைப்பட வில்லை என்று சிங்கப்பூர் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.