ஜம்மு: மக்களின் மனங்களை வெல்வதால் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஜம்மு மக்களவைத் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்ற ஜுகல் கிஷோரை பாஜக மீண்டும் களமிறக்கி உள்ளது. அவருக்காக வாக்கு சேகரிக்க ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
“முக்கியமாக, ஜம்மு-காஷ்மீரில் மக்களின் நலனில் பாஜக அக்கறை செலுத்தவில்லை என்று அவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
“காஷ்மீா் இளைஞா்கள் மத்தியில் பாஜக குறித்து பொய்யான பிரசாரங்களை இங்குள்ள எதிா்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. ஆனால், உண்மையில் காஷ்மீா் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் பாஜக செயல்பட்டு வருகிறது.
“பாஜக தனது செயல்பாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் மனங்களை வென்றுள்ளது.
“வாக்குகளைப் பெறுவதைவிட மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படுவதன் மூலம் அவா்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
“இதுவே பாஜகவுக்கு தோ்தல்களில் வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது,” என்று அமித் ஷா பிரசாரம் செய்தார்.
“காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இதுநாள் வரை காஷ்மீா் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன.
“காஷ்மீரில் போலி என்கவுண்ட்டா்களை நடத்தியதற்கும் இளைஞா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கும் இங்கு முன்பு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவைதான் காரணம்.
“கடந்த 70 ஆண்டுகளாக பயங்கரவாதம், வன்முறை, கல்வீச்சு, பிரிவினைவாதம் ஆகியவற்றால் காஷ்மீா் பின்தங்கிவிட்டது.
“காஷ்மீரும் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல வளர வேண்டும். இந்த மண்ணின் மக்களுக்கு அனைத்து பயன்களும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுள்ளது,” என்று அமித் ஷா பிரசாரம் செய்தார்.