நித்திஷ் செந்தூர் - 'சிலம்பு கண்ட தமிழ்' என்ற கருப்பொருளுடன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய இலக்கிய நிகழ்ச்சி ஒன்று சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சுவையையும் காப்பியத்தில் கூறப்பட்டுள்ள விழுமியங்களைப் பற்றியும் ஆராய்ந்தது. இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 120 பேர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் 'சிலப்பதிகார மாநாடு' எனும் அங்கத்திலும் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் குறும்படப் போட்டியிலும் தங்களின் படைப்புகளை முன்வைத்தனர்.
நிகழ்ச்சியின் முதல் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் 'நவீன யுகத்தில் சிலப்பதிகாரம்' எனும் தலைப்பில் தாங்கள் எழுதிய ஆய்வு கட்டுரையின் சுருக்கத்தைப் பார்வையாளர்களுக்கு விருந்தாக்கினர். பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் குறும்படப் போட்டியில், சிலப்பதிகாரத் தலைப்பு ஒன்றையொட்டி பத்து நிமிடங்களுக்குள் அவர்கள் தயாரித்த குறும்படத்தைப் பார்வையாளர்களின் முன்பு காட்டினர். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழைய காப்பியத்தின் கதையை எடுத்துக் கூறிய விதம் புத்தாக்கமாகவும் இளையர்களை ஈர்க்கக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது. சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற்றனர்.
கல்வி அமைச்சின் உதவி இயக்குநர், சிறப்பு ஆய்வாளர் (தமிழ் மொழி) திரு.வேணுகோபால் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர், "தமிழ் மொழியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் மாபெரும் பொறுப்பு இளையர்களின் கைகளில் உள்ளது. இலக்கியத்தின் வாயிலாக தமிழ்மொழியின் மீது ஆர்வத்தை ஏற்பாடுத்த வழி வகுக்க வேண்டும்," என்று கூறினார்.