புதுடெல்லி: நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தின் அணித் தலைவர் இயன் மோர்கன் இறுதிப் போட்டியிலும் நாங்கள் ஆதிக்கம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார். இந்த வெற்றி குறித்து பேசிய மோர்கன், "முதல் 7 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் அந்த அணி 180 ஒட்டத்திற்கு மேல் குவித்துவிடும் என்று கருதினேன்.
"ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை 153 ஒட்டத்திற்குள் கட்டுப்படுத்தினார் கள். "தொடர்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்த அணியை முன்னேறவிடவில்லை. குறிப்பாக, வில்லியம்சனின் விக்கெட் மிகவும் முக்கியமானதாகும். "நாங்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி இருக்கிறோம். இறுதிப் போட்டியில் விளையாடுவதே அனைவரின் கனவாகும்," என்றார் அவர். 'சூப்பர் 10' சுற்றுகளில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காத நியூசிலாந்து அணி அரையிறுதியில் மண்ணைக் கவ்வியது. இத்தோல்வி பற்றி பேசிய, அணித் தலைவர் வில்லியம்சன், "சிறந்த அணியிடமே நாங்கள் தோற்று இருக்கிறோம். இங்கிலாந்து அணியே அனைத்துப் பாராட்டுதலுக்குரியதாகும்.
நியூசிலாந்து வீரர்கள் வீசிய பந்துகளை விளாசித் தள்ளி 44 பந்துகளில் 78 ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் (சிவப்பு சட்டை) ஆட்ட நாயகன் விருது பெற்றார். படம்: ஏஎஃப்பி