மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கதவைத் திறக்கச் சொன்னபோது தாயாரையும் உள்ளே வைத்து தாமும் உள்ளிருந்து வீட்டுக்கதவைப் பூட்டிக்கொண்டார் ஆடவர் ஒருவர். 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு நேற்றுக் காலை போலிசார் அந்த ஆடவரைக் கைது செய் தனர். அங் மோ கியோ அவென்யூ 8ல் உள்ள புளோக் 508ல் நடந்த இந்தச் சம்பவம் பற்றி நேற்று முன்தினம் இரவு போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்குள் இருந்த வீ, தாயாரைக் கொல்வதுடன் தம்முடைய உயிரையும் மாய்த்துக்கொள்ள இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
'ஸ்டார்', சிறப்பு கமாண்டோ படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்றுக் காலை 10 மணி அளவில் எட்டாவது மாடியில் இருந்த அந்த வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர் அதிகாரிகள். அந்த வீட்டிலிருந்து மூன்று கத்திகள் கைப்பற்றப்பட்டன. அந்த வீட்டின் மேல் தளம், கீழ்த் தளம் ஆகியவற்றில் வசிக்கும் சில குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வீடுகளிலிருந்து வெளியேற்றினர். அந்த நபர் தமது தாயாருடன் அதே வீட்டில் எட்டு ஆண்டுகளாக வசிப்பதாக அண்டை வீட்டுக்காரரான 70 வயது வீ லாய் ஹுவாட் கூறினார். சென்ற ஆண்டு தாய், மகனுக்கிடையே பெரிய சண்டை ஒன்று மூண்டதாகவும் திரு வீ சொன்னார்.
மாடிப்படிகளில் அமர்ந்து அந்த நபர் தாமாகவே பேசிக்கொண்டிருப்பார் எனக் குறிப்பிட்ட அண்டை வீட்டார், தினமும் அவர் கத்துவது கேட்கும் என்றனர்.
13 மணி நேரம் போராடிய அதிகாரிகள், பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்தனர். படம்: ஷின் மின்