ஈரோடு: திமுகவும் அதிமுகவும் சேர்ந்து அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக தேமுதிக பொருளாளர் இளங்கோவன் குற்றம்சாட்டி உள்ளார். வேறொரு கட்சி ஆட்சியமைப்பதைத் தடுப்பதே அவ்விரு கட்சிகளின் எண்ணம் என்றும் இதன் பொருட்டு இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். "சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் கட்சியைவிட்டு வெளியேறியுள்ளதால் தேமுதிகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. திமுக தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் சூழ்ச்சியால் நிர்வாகிகள் சிலர் வெளியேறியுள்ளனர்," என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவைப் பொறுத்தவரை கட்சியின் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையிலும் தொண்டர்கள் என்ற அடிப்படையிலும் யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் கூறலாம் என்று குறிப்பிட்ட அவர், எதிலும் இறுதி முடிவை கட்சித் தலைவர் விஜயகாந்த்தான் எடுப்பார் என்று கூறியுள்ளார். "திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பிற கட்சிகளைத் தொடர்பு கொண்டால் கூட்டணிப் பேச்சுவார்த்தை என செய்தி வெளியாகிறது. ஆனால், மற்ற கட்சிகள் கூட்டணி பற்றி பேசினால் பேரம் என சிலர் செய்தி வெளியிடுவது ஏன்? "திமுக, அதிமுகவின் தவறான பிரசாரத்தால்தான் இப்படிப் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிடுகின்றனர். தேர்தலுக் காக மதுவிலக்கு என்ற பொய்யான வாக்குறுதியை ஜெயலலிதா அளித்துள்ளார்,"என்று இளங்கோவன் மேலும் தெரிவித்துள்ளார்.